ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி.. மகாலட்சுமி அளித்த சாபம்.. குதிரை முகமாக மாறிய மகாவிஷ்ணு.. புராண கதை
மதுரை: ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி நாளை கொண்டாடப்பட உள்ளது. ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நாளில் ஹயக்ரீவர் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும்,ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஹயக்ரீவர் ஜெயந்தி புராண கதை: ஒருவருக்கு கல்விச் செல்வத்தை வழங்க வழங்க, ஞானமும் கல்வியும் நமக்கு அதிகரிக்கும். நமக்கு கடைசி வரை வரக்கூடியது கல்வி செல்வமாகும். அத்தகைய கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார். ஸ்ரீ ஹயக்ரீவ அவதாரம் திருமாலின் பதினெட்டாவது அவதாரமாகக் கருதப்படுகிறது. அவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றிய புராண கதையை பார்க்கலாம்.

லட்சுமி ஹயக்ரீவர்: மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார். அவரது உக்கிரகத்தைத் தணிக்க, அன்னை லஷ்மி அருகில் வர ஆனந்தமடைந்தார் ஹயக்ரீவர். தனது மடியில் மகாலஷ்மியை அமர்த்திக் கொண்டதால், லட்சுமி ஹயக்ரீவர் என்று அழைக்கப்பட்டார். வேதத்தை மீட்ட பெருமாள் ஆனதால் இவரைத் துதித்தால் கல்வி கேள்விகளில் சிறக்கலாம் என்பது ஐதீகம்.
காக்கும் கடவுளான திருமால் அசுரர்களான மது, கைடபர் என்ற இருவரையும் வதைத்த பின்னர் மேலும் பல அசுரர்களோடு, ஆயிரக்கணக்கான முறை போரிட்டு அவர்களையெல்லாம் கொன்றார். இதனால் அவர்களைப்புற்றார். மிகவும் சோர்வுடன் பத்மாசனத்தில் அமர்ந்தவாரே, நாண் பூட்டிய தனது வில்லை பூமியில் ஊன்றி, கழுத்தை அதன் மீது சாய்த்து ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார். திருமால் இவ்வாறு திடீரென்று தூக்கம் கொண்டபோது உலகமே செயலிழந்து போனது! தேவர்கள் கதி கலங்கி பிரம்மாவும், சிவனும் சேர்ந்து திருமாலின் தூக்கத்தை எப்படியேனும் கலைத்து அவரைத் துயிலெழச் செய்ய வேண்டுமென்று வேண்டினர். பிரம்மனால் படைக்கப்பட்ட பூச்சி இனங்களில் ஒன்றான கரையான் பூச்சி அந்த ஊன்றப்பட்ட வில்லின் நாண் நுனியினைக் கடித்து அரித்தால், நாண் அறுந்த அந்த ஓசையில் இறைவன் துயிலெழுந்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தனர்.
பிரம்மாவின் கட்டளைப்படி கரையான்கள் ஒன்று திரண்டு வில்லின் நுனியை அரிக்கத் தொடங்கின. பேரொலியேடு நாண் அறுந்தது. அதே வேகத்தில் வில் திருமாலின் தலையை வெட்டி துண்டித்து விட்டது. இதைப் பார்த்து எல்லோரும் திடுக்கிட்டு போனார்கள். ஒருமுறை மகாவிஷ்ணு, லட்சுமியின் முகத்தைப் பார்த்து கேலி செய்ய, தேவியோ கோபம் அடைந்து தன்னைப் பரிகாசம் செய்த இறைவனின் தலை ஒரு சந்தர்ப்பதில் அறுந்து விழக் கடவது என்று சாபமிட்டாளாம். இந்த சாபத்தின்படியே திருமாலின் தலை அறுந்து போயிற்றாம். இதே நேரத்தில் சரஸ்வதி நதிக்கரையில் குதிரைத் தலையுடன் கூடிய ஹயக்ரீவன் என்ற அசுரன் ஒருவன் தேவி பராசக்தியை நோக்கி தவம் புரிந்து வந்தான். தேவி அவனுக்கு காட்சி அளித்தபோது, குதிரை முகம் படைத்த ஒருவனால் மட்டுமே தனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற வரத்தைக் கேட்டுப் பெற்றான். பிறகு அனைத்து தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான்.
இதற்கிடையே பிரம்மாவும் இதர தேவர்களும் திருமாலின் உடலில் வேறு ஒரு பொருத்தமான தலையை கண்டுபிடித்து பொருத்துமாறு தேவ சிற்பியான துவஷ்டாவை வேண்டினர். துவஷ்டாவும் ஓர் அழகிய ஆண் குதிரையின் தலையை வெட்டி கொண்டு வந்து திருமாலின் கழுத்தில் பொருத்தினார். இதன் மூலம் குதிரைத் தலையுடன் கூடிய ஸ்ரீஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார். ஸ்ரீஹயக்ரீவர் இந்திரனையும், தேவர்களையும் துன்புறுத்தி வந்த ஹயக்ரீவசுரனை வதம் செய்தார்.
கல்வி தடை நீங்கும்: புதன் பகவான் புத்திகாரகன். புதனின் அதிதேவதை விஷ்ணு பகவானாவார். அசுரர்களிடமிருந்து வேதத்தை காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவர் கல்விக்கதிபதியான சரஸ்வதியின் குரு என புராணங்கள் போற்றுகின்றன. ஸ்ரீ லட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்குவதன் மூலம் கல்வியறிவையும் பெருக்குவதோடு புத்திக்கூர்மையையும் அதிகரிக்கும். கல்வித்தடை நீங்கும். கலைகளில் சிறக்கலாம் அறியாமை எனும் இருளில் இருந்து ஞானம் எனும் ஒளியை நோக்கி அழைத்து செல்லும் ஞான ஆசிரியனாக ஹயக்ரீவர் அருள்புரிகிறார். கல்விச் செல்வத்தோடு சேர்த்து பொருள் செல்வத்தை வழங்கும் விதமாக சில தலங்களில் தனது மடியில் லட்சுமி தேவியுடன் இவர் அருள்புரிகிறார். இந்த வடிவம் 'லட்சுமி ஹயக்ரீவர்' எனப்படுகிறது.
தொழில் சுபிட்சமடையும்: கல்வியிலும் இசை, நடனம் போன்ற கலைகளிலும் சிறந்து விளங்குவதற்கு ஞானத்தின் இருப்பிடமாக விளங்கும் ஹயக்ரீவரை வணங்கலாம். படிப்பில் சற்று மந்தமாக இருப்பவர்கள், ஞாபக சக்தி குறைவாக உள்ளவர்கள், பேச்சு சரியாக வராதவர்கள் இவரை வணங்கினால் சகல குறைகளும் நீங்கி ஞானம் அதிகரிக்கும். செல்வாக்குடன் சொல்வாக்கும் நிறைந்த வக்கீல்கள், விற்பனை பிரதிநிதிகள், புரோகிதர்கள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் ஹயக்ரீவரை வணங்கி வழிபட்டால் தடைகள், தடங்கல்கள் நீங்கி தொழில் சுபிட்சமாக நடக்கும்.
திருவோண நட்சத்திரத்தில் வழிபாடு: ஜோதிடத்தில் புதனுக்கும் புத்திக்கும் தொடர்பு உள்ளது. அவர் 'வித்யாகாரகன்' என அழைக்கப்படுகிறார். மனத்தை ஆள்பவன் சந்திரன். அந்த சந்திரனின் புத்திரன்தான் புதன். எனவேதான் மனத்தின் எண்ண ஓட்டத்துக்கும் அறிவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரப்படி புதன் திசை, சந்திர திசை நடப்பவர்கள், 4, 9ஆம் அதிபதிகளின் திசை நடப்பவர்கள் புதன்கிழமையன்றும், திருவோண நட்சத்திரத்திலும் ஹயக்ரீவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாற்றி வழிபட ஞானமும் அறிவும் மேம்படும்,ஞாபக சக்தி அதிகரிக்கும்.
ஹயக்ரீவ காயத்ரி மந்திரம்: ஓம் வாகீஸ்வராய வித்ம ஹேஹயக்ரீவாய திமஹி தன்னோ ஹம்ஸ ப்ரசோதயாத்' என்ற ஹயக்ரீவ காயத்ரி மந்திரத்தை மாணவர்கள் தினமும் சொல்லி வந்தால்,கல்வியில் கவனமும் நாட்டமும் அதிகரித்து அதிக மதிப்பெண் பெறலாம். ஞானானந்தமயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் ஸர்வவித்யானாம் ஹயக்ரீவ முபாஸ்மஹே"என்று பள்ளிகளில் தினசரியும் ஸ்லோகம் கூறி ஹயக்ரீவ மூர்த்தியை வழிபட்டு அன்றைய தினத்தை தொடங்குகின்றனர். செங்கல்பட்டு அருகில் செட்டிப் புண்ணியம், கடலூர் அருகில் திருவந்திபுரம், பாண்டிச்சேரி அருகில் முத்தியால்பேட்டை ஆகியவை ஹயக்ரீவருக்கு ஆலயங்கள் அமைந்துள்ளன. வாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் உள்ள லட்சுமி ஹயக்ரீவரை வணங்கலாம். கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாத சுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். நாளை ஹயக்ரீவ ஜெயந்தி நாளில் அவரை வழிபட்டு அருள் பெறுவோம்.












Click it and Unblock the Notifications