அட்சய திருதியை..சித்ரா பவுர்ணமி..செல்வ வளம் தரும் சித்திரையில் என்னென்ன விஷேசங்கள்
சென்னை: சூரியன் மேஷ ராசியில் உச்சகதியில் உதயமாகி இந்த உலகத்தை வலம் வர அடி எடுத்து வைக்கும் முதல் நாள் சித்தரை மாதம் முதல் தேதி. செல்வ வளம் தரும் சித்திரை மாதத்தில் என்னென்ன விரத நாட்கள் உள்ளன. எந்த நாளில் என்னென்ன விஷேசங்கள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்.
உயிரினங்கள் சுபிட்சமாக வாழ்வதற்கு உகந்த அவதாரங்கள் சித்திரை மாதத்தில் தான் எடுக்கப்பட்டன. இரணியனை வதம் செய்ய மகாவிஷ்ணு இந்த மாதத்தில் தான் நரசிம்ம அவதாரம் எடுத்தார். பரசுராமரும் இம்மாதத்தில் தான் அவதரித்தார். மக்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மரணக் கணக்கு எழுதும் சித்திரகுப்தனும் இம்மாத பௌர்ணமி அன்று தான் அவதரித்தார்.

சூரியன் அஸ்தமிக்கும் நேரமும் சந்திரன் உதயமாகும் நேரமும் ஒன்றாக அமையும் உன்னத நாள் சித்ரா பௌர்ணமி. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் சித்திரையில் தான் நடந்தேறுகிறது. 12 தடவை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்கும் பாக்கியம் ஒருவருக்கு கிடைத்தால் அவருடைய தலைமுறை தோஷம் நிவர்த்தியாகும்.
அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல நாம் வாங்கும் ஐஸ்வர்யம் அத்தனையும் பல்கிப் பெருகும் என்பது ஐதீகம். இந்த மாதத்தில் தான் இந்திர விழா கொண்டாடப்படுகிறது.அப்படிப்பட்ட அற்புதம் மிகுந்த சித்திரை மாதத்தில் நவகிரகங்களின் கூட்டணியால் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சித்திரை 1 தமிழ் வருடப்பிறப்பு விஷு புண்ணிய காலம் பிறக்கிறது. இன்றைய தினம் சூரிய பகவானையும் குல தெய்வத்தையும் கனி வகைகளை படைத்து புது பஞ்சாங்கத்துடன் வழிபடுவது சிறப்பு. இதன் மூலம் ஆண்டு முழுவதும் சிறப்பான நாட்களாக அமையும் என்பது நம்பிக்கை.
சித்திரை 09,10 அட்சய திருதியை தங்கம், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்கவும் கௌரி பூஜை செய்யவும் ஏற்ற நாள். தலைமுறைக்கும் செல்வ வளம் பெருக இந்த நாளில் நீர் மோர், விசிறி, எள் தானம் செய்யலாம்.

சித்திரை 9 குரு பெயர்ச்சி. குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்.
சித்திரை 10 வாஸ்து நாள். இந்த நாளில் வீடு, மனை கட்ட வாஸ்து பூஜை செய்யலாம். சித்திரையில் செய்யும் வாஸ்து செல்வ வளத்தை தரும். சித்திரையில் வீடு கட்ட வாஸ்து செய்தால் கார்த்திகையில் பால் காய்ச்சி குடியேறலாம் என்பது நம்பிக்கை.
சித்திரை 12 ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி. ஆதி சங்கரரை வழிபட ஏற்ற நாளாகும். இன்றைய தினம் ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தியாகும். ஸ்ரீராமானுஜர் உபதேசித்த "ஓம் நமோ நாராயணாய" என்று சொல்லி வழிபட நன்மைகள் நடைபெறும்.
சித்திரை 17 வாசவி ஜெயந்தி. சித்திரை மாதம் தசமி திதி, ஸ்ரீ வாசவி ஜெயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. அன்னை வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கலியுகத்தில் அவதரித்த அன்னை ஆதிபராசக்தியின் அம்சமாக போற்றப்படுகிறார்.

சித்திரை 18 மே 1ஆம் தேதி புதன் ஜெயந்தி நவகிரகங்களில் புதன் பகவானுக்கு பச்சை நிற உடை உடுத்தி 5 தீபம் வைத்து பச்சை மலர்களால் வணங்க நன்மைகள் நடைபெறும். புதன் தோஷம் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
சித்திரை 19 ஸ்ரீ மீனாட்சி திருக்கல்யாணம். மதுரையில் சித்திரை திருவிழாவின் சிறப்பான நிகழ்ச்சியான மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதருக்கும் திருமணம் நடைபெறும்.
சித்திரை 21 ஸ்ரீ கள்ளழகர் எதிர்சேவை, அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு வரும் கள்ளழகரை மூன்றுமாவடி அருகே பக்தர்கள் எதிர்கொண்டு அழைப்பார்கள்.
சித்திரை 21 ஸ்ரீ நரசிம்மர் ஜெயந்தி. இன்றைய தினம் விரதமிருந்து ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட கடன் தொல்லைகள் நீங்கும்.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம். கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் சித்திரை 21ஆம் தேதி முதல் ஆரம்பமாகிறது.
சித்திரை 22 சித்ரா பௌர்ணமி. சித்திரகுப்த பூஜை செய்ய ஏற்ற நாள். லட்சுமி நாராயணரை வழிபடலாம். ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல்.












Click it and Unblock the Notifications