திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை கொட்டிக்கொடுத்த பக்தர்கள்.. தரிசனத்திற்கு கெடுபிடி அதிகரிப்பு
திருப்பதி: கோடை விடுமுறையை முன்னிட்டு திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் மட்டும் உண்டியல் வருமானம் ரூ.114 கோடி கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோவிலுக்குள் பக்தர் ஒருவர் செல்போனை எடுத்து சென்று வீடியோ எடுத்த விவகாரத்தில் கோவிலுக்கு செல்லும் பக்தர்களை சோதனை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஏழாம் தேதி இரவு இலவச தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட சென்ற பக்தர் ஒருவர் செல்போனை கோவிலுக்குள் எடுத்து சென்று வீடியோ பதிவு செய்தார். அந்த பக்தர் கோயிலுக்குள் பதிவு செய்த காட்சிகள் ஊடகங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பக்தர்கள் அனைவரையும் தேவஸ்தான விஜிலென்ஸ் துறை ஊழியர்கள் தீவிரமாக சோதனை செய்த பின்னர் மட்டுமே கோவிலுக்குள் அனுப்பும் நிலையில் இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்த நிலையில் இது பற்றி தேவஸ்தான அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் செல்போனை கோவிலுக்குள் எடுத்து சென்று வீடியோ எடுத்த தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரை சேர்ந்த பக்தர் ராகுல் ரெட்டி என்று அடையாளம் கண்ட போலீசார் அவரை திருப்பதிக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, ஒரு மணி நேரத்தில் 5,000 முதல் 5,500 பக்தர்கள் வரை ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர். அத்தனை பேரும் தீவிர சோதனைக்கு பின்னர் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.
நடைபெற்ற சம்பவம், ஒரு மணி நேரத்தில் கோவிலுக்குள் செல்ல வேண்டிய பக்தர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகளின் உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த தேவையான ஆலோசனை நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

இந்த நிலையில் பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக செல்லும்போது அவர்களை சோதனை செய்யும் பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பக்தர்களை சோதனை செய்ய பயன்படுத்தும் டோர் பிரேம் மெட்டல் டிடெக்டர்கள், ஸ்கேனர்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கவும் தேவஸ்தான நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.
அதே நேரத்தில் பாதுகாப்பு, சோதனை ஆகியவை காரணமாக கோவிலுக்குள் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை எந்த விதத்திலும் குறையக் கூடாது என்பதிலும் தேவஸ்தான நிர்வாகம் உறுதியாக உள்ளதாக தெரியவந்துள்ளது. ஏப்ரல் மாதம் ஏழுமலையானின் காணிக்கை வருமானம் 114 கோடியே 14 லட்சம் ரூபாய் ஆகும். கடந்த ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 95 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையான வழிபட்ட நிலையில் அவர்கள் கோவிலில் உள்ள உண்டியலில் 114 கோடியே 14 லட்சம் ரூபாய் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்.
ஏப்ரல் மாதம் ஒரு கோடியே ஒரு லட்சம் லட்டு பிரசாதம் திருப்பதி மலையில் விற்பனை ஆகி உள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானுக்கு 100 கோடி ரூபாய்க்கும் அதிக தொகையை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications