தள்ளாத வயதிலும் தளராத பாட்டி..99 வயதில் ஐயப்பன் தரிசனம்.. ஆச்சரியப்பட்ட பக்தர்கள்
சபரிமலை:
சபரிமலை சன்னிதானத்தில் நேற்று அதிகாலையில் தரிசனத்திற்கு வந்த 99 வயது மூதாட்டி சாமி தரிசனம் செய்ய வந்தது ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் ஆர்வத்துடன் வந்து பாட்டியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
சாமியே சரணம் ஐயப்பா.. என்ற சரண கோஷம் ஒலிக்க பாலகர்கள் முதல் தள்ளாத தாத்தா பாட்டிகள் வரை ஐயப்பனை தரிசனம் செய்ய சபரிமலைக்கு வருகின்றனர். கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் இருட்டி பகுதியை சேர்ந்த தேவு என்ற 99 வயது மூதாட்டி நேற்று சபரிமலையில் அதிகாலையில் சன்னிதானத்தில் சாமி தரிசனம் செய்தார். இது அங்கு நின்ற ஐயப்ப பக்தர்கள் மற்றும் போலீசார் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இவ்விழாவில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகிறார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே வரவேண்டும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அதன்படி தினமும் கோவிலில் தரிசனம் செய்ய ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இதையடுத்து பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த தினமும் 90 ஆயிரம் பக்தர்களை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்க தேவசம்போர்டு அதிகாரிகள் முடிவு செய்தனர். மேலும் கோவில் தரிசன நேரமும் அதிகரிக்கப்பட்டது.
பக்தர்கள் 19 மணி நேரம் 18ஆம் படி ஏறவும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்யவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வரை அவர்களை குழுக்களாக அனுப்பவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
எத்தனையோ பக்தர்கள் சபரிமலைக்கு ஐயப்பனை தரிசனம் செய்ய வந்தாலும் தேவு என்ற 99 வயது மூதாட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 26வது ஆண்டாக சபரிமலைக்கு வரும் தேவு என்ற மூதாட்டி இம்முறை உறவினர்கள் உதவியோடு ஐயப்பனை தரிசனம் செய்ய வந்திருந்தார்.
வயது முதிர்ச்சியையும் உடல் ஆரோக்கியத்தையும் பொருட்படுத்தாமல் சவாலை எதிர் கொண்டு 99 வயதிலும் சன்னிதானம் வந்த மூதாட்டி சாமிதரிசனம் செய்ததை பார்த்து அங்கிருந்த பக்தர்கள் கூட்டம் வியந்து போனது என்றே சொல்லலாம். மேலும் அங்கிருந்த பக்தர்களில் சிலர் மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்தும் சென்றனர்.
இன்று அதிகாலையில் 3 மணிக்கு பள்ளி உணர்த்தல் தொடர்ந்து நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4 மணி முதல் மதியம் 1.30 மணிக்கு நடை சாத்தும் வரையிலும், மேலும் மாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.30 மணிக்கு நடை சாத்தும் வரைக்கும் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து கோவில் வருவாயும் அதிகரித்து உள்ளது. அதன்படி கோவில் நடை திறந்த நாள் முதல் நேற்று முன்தினம் வரை கோவிலின் வருவாய் ரூ.150 கோடியை தாண்டியுள்ளது.












Click it and Unblock the Notifications