திருப்பதியை போல்! பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலையில் பிரேக் தரிசன முறை! விரைவில்!
சென்னை: திருப்பதியை போல் திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட கோயில்களில் பிரேக் தரிசனம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சொல்லப்படுகிறது. இதனால் பக்தர்களின் காத்திருப்பு நேரம் என்பது வெகுவாக குறையும் என தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களான பழனி, திருச்செந்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தலங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள், பௌர்ணமி, பங்குனி உத்திரம், சஷ்டி, சூரசம்ஹாரம், கிருத்திகை, கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தமிழக பக்தர்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருவதால், இக்கோயில்களில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

இந்தக் கூட்ட நெரிசல் காரணமாக உள்ளூர் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கூட சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை உள்ளது. இந்தக் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் நோக்குடன், இந்து சமய அறநிலையத் துறை தற்போது 'பிரேக் தரிசனம்' முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் பக்தர்களின் காத்திருப்பு நேரம் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருக்கும் நிலையில் கட்டண தரிசன வரிசை அனுமதிக்கப்படும் கிளி கோபுரம் அருகே பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் சிலர் கீழே விழுந்த சம்பவம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேக் தரிசனம் என்றால் என்ன?
பிரேக் தரிசனம் என்பது, கோயில்களில் தனி நுழைவு வாயில்கள் மூலம், குறுகிய காத்திருப்பு நேரத்துடன் முன்னுரிமை விரைவு தரிசனம் செய்வதாகும். பிரேக் தரிசனம் செய்பவர்களுக்குச் சிறப்பு தரிசனத்துடன் பிரசாதம், ஆரத்தி, தீர்த்தம் போன்ற கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும்.
எந்தக் கோயில்களில் முதற்கட்டமாக அமல்?
முதல் கட்டமாக, பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் மற்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் 'பிரேக் தரிசனம்' முறை கொண்டுவரப்படுகிறது. இதற்காகப் பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசன தேதி மற்றும் நேரத்தைப் பதிவு செய்து, கோயிலில் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்யலாம்.
பழனியில் பிரேக் தரிசன சலுகைகள்
பழனி கோயிலில் ரூ. 300 கட்டணத்தில் பிரேக் தரிசனம் செய்யும் பக்தர்களுக்குப் பஞ்சாமிர்தம், தேங்காய், பழம், விபூதி, மஞ்சப்பை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும்.
திருப்பதி கோயில்
திருப்பதியில் உள்ளதைப் போலவே, இந்த 'பிரேக் தரிசனம்' முறையானது விரைவில் மேற்கண்ட மூன்று கோயில்களிலும் நடைமுறைக்கு வர உள்ளது. இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட பிற கோயில்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 'பிரேக் தரிசனம்' முறை பக்தர்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications