புத்த பூர்ணிமா 2023: துன்பமின்றி வாழ..ஆசையை துறந்து பேரன்பை செலுத்த சொன்ன மகான்..
சென்னை: புத்தர் அவதரித்த தினமும் ஞானம் கிடைத்த நாளும் புத்த பூர்ணிமா திருநாளாக கூறப்படுகிறது. தற்போது இந்த பண்டிகை புத்தரின் 2585ஆவது பிறந்த நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்ட நாளாகும். இந்த ஆண்டு மே 5ஆம் தேதி கௌதம புத்தரின் பிறந்தநாள் புத்த பூர்ணிமா திருநாளாக கொண்டாடப்படுகிறது.
கௌதமபுத்தர் கிமு 563- 483 ஆண்டுகளில் நேபாளில் உள்ள லும்பினி என்ற ஊரிலே பிறந்ததாகக் கூறப்படுகிறது. இவர் என்பது வயதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கௌஷிநகர் என்ற பகுதியில் மறைந்ததாகக் கூறப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பவுர்ணமி நாள் 'புத்த பூர்ணிமா' திருநாளாக உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் கொண்டாடப்படுகிறது. தனது இறுதி ஆண்டுகளில் பௌத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இந்திய விடுதலைக்குப் பின்னர் சட்ட அமைச்சராக இருந்தபோது ஆண்டுதோறும் இந்நாள் பௌத்த நெறியாளர்களுக்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இந்தியத் துணைக்கண்டத்தில் சிக்கிம், லடாக், அருணாசலப் பிரதேசம், கலிம்பாங், டார்ஜீலிங் முதலான பகுதிகளில் இந்த நாள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பௌத்தத்தை ஏற்றுக்கொண்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் புத்த பூர்ணிமா பௌத்தர்களின் கொண்டாட்டமாக அமைகிறது.
உலகம் முழுவதும் பௌத்த மதத்தைப் பின்பற்றும் பௌத்தர்கள் இந்த புத்த பூர்ணிமா தினத்தில், புத்தரை வழிபாடு செய்து வேண்டிக் கொள்கின்றனர். புத்தர் கோயிலுக்குச் சென்று வேண்டுதல் செய்பவர்கள் மற்றவர்களுக்குப் பல பொருட்களைத் தானமாக வழங்குகின்றனர். விரதம் இருந்து தியானம் செய்து புத்தரை வழிபடுகின்றனர்.
பௌத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்குப் பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற இடம் வழிபாடு செய்ய முக்கிய ஸ்தலமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் உலகத்தில் பல முக்கியமான இடங்களும் உள்ளது. இந்த புத்த கயா என்னும் இடத்தில் தான் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாகவும் இன்றுவரை நம்பப்படுகிறது. புத்தரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாம் இந்த புத்த பூர்ணிமாவில் நிகழ்ந்ததாகப் பௌத்தர்கள் அனைவரும் நம்புகின்றனர். அதனால் இந்த நாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாக அவர்களால் கொண்டாடப்படுகிறது.












Click it and Unblock the Notifications