பெருமாள் அழைத்தார்! பெற்றோரிடம் கூட சொல்லாமல் 12 வயது சிறுவன் செய்த செயல்! நடுங்கிய தெலுங்கானா
திருப்பதி: டியூஷன் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சிறுக சிறுக சேர்த்த ரூ 1000 பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையானை சிறுவன் ஒருவன் தரிசிக்க சென்ற காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மீர்பேட் தாசரி நாராயணராவ் காலனியைச் சேர்ந்தவர் மதுசூதன்ரெட்டி. இவரது மனைவி கவிதா. இவர்களது 2ஆவது மகன் மகேந்தர் ரெட்டி. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த 4ஆம் தேதி டியூஷன் சென்றுவிட்டு வருவதாக கூறிய மகேந்தர் ரெட்டி , இரவாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அக்கம்பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. டியூஷனில் போய் கேட்ட போது அந்த சிறுவன் டியூஷனுக்கே வரவில்லை என டீச்சர் கூறியிருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீர்பேட் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது அவர் பைக்கில் செல்வது போல் தெரிந்தது. இதையடுத்து மேலும் அவ்வழியாக இருக்கும் சிசிடிவிகளை ஆய்வு செய்த போது அந்த சிறுவன் மலக்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்து அங்கிருந்து திருப்பதி ரயிலில் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து திருப்பதி போலீஸாருக்கு தகவல் அளித்ததை அடுத்து மகேந்தர் ரெட்டி திருப்பதி பஸ் நிலையத்தில் இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து திருப்பதி போலீஸார் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அதற்கு முன்பு பேருந்தில் வந்த ஒருவர் மூலம் மகேந்தர் ரெட்டி அவருடைய தாய் கவிதாவிற்கு போன் செய்து ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்ததாகவும் அவரை தரிசித்துவிட்டு வீட்டிற்கு வருவதாகவு்ம கூறியிருந்தார்.
இதையடுத்து திருப்பதி போலீஸார் அவரது பெற்றோருக்கு வீடியோ கால் மூலம் போன் செய்து பேச வைத்தனர். மேலும் திருப்பதியில் உள்ள சிறுவனின் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகேந்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான் இதற்கு முன்பு என் அப்பா, அம்மாவுடன் ஏழுமலையானை 15 முறை தரிசனம் செய்து வந்துள்ளேன். மீண்டும் திருப்பதிக்கு செல்ல ஆசையாக இருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டியூஷனுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறி ரயில் ஏறி திருப்பதி வந்தேன். இதற்காக வீட்டிலிருந்து நான் சேர்த்து வைத்த ரூ 1000 பணத்தை கொண்டு ரயிலில் திருப்பதி வந்தேன். மலைக்கு 10 மணிக்கு தரிசனத்திற்கு சென்றேன். காலை 4 மணிக்கு தரிசனம் முடிந்த பிறகு மீண்டும் வீட்டிற்கு செல்ல பஸ் ஸ்டாண்ட் வந்தேன்.
என்னுடன் பஸ்ஸில் வந்த ஒரு அண்ணாவின் போனில் போன் செய்து அம்மாவிடம் பேசிவிட்டேன். இவ்வாறு அந்த சிறுவன் கூறினான். பிறகு உறவினர்கள் மூலம் அவருடைய பெற்றோரிடம் சேர்த்து விடுமாறு போலீஸார் அவரை அனுப்பி வைத்தனர். ஏழுமலையானை பார்க்க தன்னந்தனியாக இந்த சிறுவன் வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொஞ்சம் ஏமாந்திருந்தாலும் சிறுவனை யாராவது கடத்திச் சென்றிருந்தால் என்ன செய்வது என்பதே பலரது அச்சமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications