வெற்றிவேல் முருகனுக்கு..ஜப்பானியர்களை கவர்ந்திழுத்த தமிழ் கடவுள்..பழனியே கொஞ்சம் பரபரப்பாயிருச்சே..!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்ததோடு, போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்து பூஜையில் பங்கேற்றனர்.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புறவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.
பழனி முருகன் கோவில் : பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில், ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.
நவபாஷாண சிலை: அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலையில் வீற்றிருக்கும் செந்திலாண்டவரின் சிலை ஒன்பது விதமான மூலிகைகளை பக்குவம் செய்து போகர் என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது. அதனால்தான் அதற்கு நவபாஷாண சிலை என்ற பெயர் ஏற்பட்டது. நவ என்றால் ஒன்பது என்று பெயர். 18 சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் போகர், தனது சீடரும் மற்றொரு சித்தருமான புலிப்பாணியுடன் இணைந்து கன்னிவாடியில் அமைந்திருக்கும் மெய் கண்ட சித்தர் குகையில்தான் இந்த நவபாஷாண சிலையைச் செய்தார் என்பது வரலாறு.

வெளிநாட்டு பக்தர்கள்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்களும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கையின் போது பல்வேறு நாட்டு கரன்சிகள் கிடைப்பதே இதற்கு உதாரணம். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது வெளிநாட்டு பக்தர்களே முருகனுக்கு அதிக அளவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் பக்தர்கள்: இந்நிலையில் பழனி முருகனை ஜப்பான் நாட்டின் டோக்கியோ மாகாணத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இவர்கள் போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக வழிபாடுகள் செய்து பூஜையில் பங்கேற்றனர். இவர்களில் பலரும் நல்ல தமிழ் பெயரை சூடியுள்ளனர். தமிழகம் வந்துள்ள இவர்கள் நவகிரக ஸ்தலங்கள், ஆறுபடை வீடுகள், சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபட வந்துள்ளதாக தெரிவித்தனர். வெளிநாட்டை சேர்ந்த இவர்கள் அனைவரும் நெற்றி நிறைய விபூதி, சந்தனம், குங்குமத்துடன் காட்சியளித்ததை பலரும் வியப்புடன் பார்த்து சென்றனர்.












Click it and Unblock the Notifications