யார் கிளப்பி விட்டானு தெரியல.. பவுர்ணமி தரிசனம் நல்லதா? திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த பக்தர்கள்
தூத்துக்குடி : உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பௌர்ணமி தினத்தில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செய்தால், வேண்டுதல் நிறைவேறும் என தாங்கள் நம்புவதாகக் கூறுகின்றனர் பக்தர்கள்..
"குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்" என்பார்கள். இப்படி மலைப்பகுதிகளில் தனது கோயில்களை அமைத்துக் கொண்ட முருகப்பெருமான் விதிவிலக்காக கடற்கரையில் குடி கொண்டிருக்கும் அற்புத ஆலயம்தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில்தான்.. வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வரும்போது உயர உயர போகும் வகையில் பாதை அமைந்துள்ளது. செந்தூர் வேலனை கும்பிட்டவருக்கு இனி வாழ்வில் ஏற்றம்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது இந்த நடைபாதை.
அறுபடை வீடுகளில், இரண்டாம் படைவீடான, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் முருகனை வழிபடுவதன் மூலம், திருமண தடை நீங்கும், தொழில் அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை. மேலும், வைகாசி விசாகத்திற்கு விரதமிருந்து திருச்செந்தூர் முருகப் பெருமானை தரிசித்து விட்டு மீன் சமைத்து சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யும் சிறப்பு வழக்கமும் இந்த தலத்தின் தனிச் சிறப்பு.
முருகன் புகழ் பரவ பரவ, கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கடலா கடல் அலையா என தெரியாத அளவுக்கு மக்கள் வெள்ளம் திருச்செந்தூர் நோக்கி அணி அணியாக செல்கிறது. அதிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த நாட்களோடு சூரசம்காரத்தின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசிக்க வருவர். அது மட்டுமல்ல சுப முகூர்த்த தினங்களில் நூற்றுக்கணக்கான திருமணங்களும் இங்கு நடப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பவுர்ணமி தினத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் முழு நிலவினை பார்த்து பூஜை செய்து, அதிகாலையில் முருகப் பெருமானை தரிசித்தால் நன்மை கிடைக்கும் என தகவல்கள் பரவி வருகிறது. குறிப்பாக பௌர்ணமி தினத்தில் கோயில் கடற்கரையில் தங்கி சுவாமி தரிசனம் செய்தால், வேண்டுதல் நிறைவேறும் என மக்கள் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கடந்த சில மாதங்களாக பௌர்ணமி தினங்களன்று பக்தர்கள் வருகை அதிகமாக இருந்து வருகிறது. அன்று குடும்பமாக கடற்கரையில் தங்கியிருந்து பரிகார பூஜைகள் செய்து, வழிபாடு நடத்துகின்றனர். இந்நிலையில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். விடிய விடிய விழித்திருந்து நிலாவை பார்த்து பூஜை செய்து, உணவு உண்டு அங்கேயே உறங்குகின்றனர்.
அதிகாலையில் குளித்துவிட்டு விஸ்வரூப தரிசனத்தில் முருகப்பெருமானை தரிசனம் செய்த போது எல்லாவித நன்மைகளும் கிட்டும் என நம்புகின்றனர். இந்த நிலையில் நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் இரவு நேரங்களிலும் திருச்செந்தூர் கடற்கரையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தடுப்புகள் அமைத்து கடலில் யாரும் குளிக்கா வண்ணம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சில மாதங்களாக தான் பௌர்ணமி நாளில் கடற்கரையில் தங்கி இருந்து முருகனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்ற தகவல் பரவி வருவதாகவும், அதற்கு முன் இந்த சம்பிரதாயங்கள் இல்லை, பௌர்ணமி அன்று இரவு தங்கினால் நல்லது என்று யாரோ ஜோதிடர்கள் சொல்லப்போக மக்கள் இங்கே குவிந்திருக்கிறார்கள் என்கின்றனர் திருச்செந்தூர் வாசிகள்.












Click it and Unblock the Notifications