எண்ணெய் இல்லை! இளநீரில் விளக்கு எரியும் அதிசயம்! தமிழகத்தில் இப்படியொரு வினோத குகை கோயிலா!
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அஞ்செட்டியில் நூரொந்து சாமி குகை கோயிலில் இளநீரில் விளக்கு எரியும் அதிசய சம்பவம் நடக்கிறது. இது காண்போருக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அஞ்செட்டியில் இருந்து 79 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நூரொந்து சாமி மலை என்ற கிராமம். இது கர்நாடக எல்லையில் அமைந்துள்ளதால் இங்குள்ள மக்கள் கன்னடம் பேசுவார்கள்.

கன்னடத்தில் நூரொந்து என்றால் தமிழில் 101 என்று அர்த்தம். அஞ்செட்டி இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை கிராமம் ஆகும். இந்த நூரொந்து சாமி கோயிலுக்கு செல்லும் மலை பாதை சற்று பயங்கரமாகவே இருக்கும். காரணம் அந்த வழியில் யானை சாணங்கள் இருக்கும்.
எனவே காட்டு யானைகள் வந்து சென்ற இடமாகவே அது கருதப்படுகிறது. பொதுவாக கோயில்கள் என்றாலே தீபம்தான். அதிலும் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபடுவதுதான் வழக்கம். அதிலும் நல்லெண்ணெய், நெய், 5 எண்ணெய்களின் கூட்டு உள்ளிட்டவை கொண்டுதான் விளக்கு ஏற்றப்படும்.
எண்ணெய், பெட்ரோல், டீசல், கற்பூரம், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்டவைதான் எரிபொருள்கள். இவற்றின் துணையுடன்தான் தீபமும் எரிகிறது. அடுப்பும் எரிகிறது. ஆனால் இளநீரில் உள்ள நீரை ஊற்றி தீபம் ஏற்றுவதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? இந்த சம்பவம்தான் நூரொந்து கோயிலில் நடக்கிறது.

கண் முன்னே: இந்த கோயிலுக்கு செல்லும் போது இளநீரை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அந்த காட்டு பகுதியில் இளநீர் கடைகள் ஏதும் கிடையாது. அவ்வாறு வாங்கிச் செல்லும் போது அங்குள்ள பூசாரி நம் கண் முன்னே விளக்கை துடைத்து அதில் இளநீரை ஊற்றி திரியை அந்த இளநீரில் நனைத்து தீபம் ஏற்றுகிறார். இது பார்ப்பதற்கு ஆச்சரியத்தை கொடுக்கிறது.
இளநீரில் தீபம் எப்படி எரிகிறது: 12 ஆம் நூற்றாண்டில் இந்த காட்டில் நூரொந்து சாமி வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் குளத்தின் நீரை கொண்டு தீபம் ஏற்றினாராம். பின்னர் அந்த நீரை பக்தர்கள் அசுத்தம் செய்துவிட்டதால் தூய்மையான இளநீரை கொண்டு தீபம் ஏற்றப்படுகிறதாம். 800 ஆண்டுகளாக இந்த முறையில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
யார் இவர்: நூரொந்து சாமி தியானத்தில் இருந்தாராம். அப்போது அஞ்செட்டி மலையில்101 குகைகள் இருப்பதை அறிந்தாராம். நூரொந்து சாமி ஒரு வீட்டில் யாசகம் பெற்ற போது அவருக்கு ஒரு உருண்டை களியும் குழம்பும் கிடைத்ததாம். அப்போது அங்கு 100 பேர் வந்து நூரொந்து சாமியிடம் பசி என்றார்களாம். உடனே நூரொந்து சாமி தனது பையை அட்சய பாத்திரமாக மாற்றி பக்தர்களுக்கு களியை கொடுத்துக் கொண்டே வந்தாராம்.
அள்ள அள்ள குறையவில்லை: 100 பேரும் வயிறார சாப்பிட்ட பிறகும், மீதம் களியும் குழம்பும் இருந்தது. அப்போது 101 ஆவது நபராக நூரொந்து சாமி சாப்பிட்டாராம். அவர் சாப்பிட்டது போல் மீதம் நிறைய இருந்ததாம். அது முதல் அவர் நூரொந்து சாமி என்றே அழைக்கப்படுகிறார்.
அதாவது கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டில் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த பசவண்ணா. இவர் சாதிகளை ஒழிக்க பாடுபட்டு வந்தார். அப்போது கலப்பு திருமணம் நடந்ததால் அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டது. அந்த கலவரத்தின் போது 3 சிவனடியார்கள் தியானம் செய்ய புறப்பட்டனராம். ஒருவர் மலை மாதேஸ்வரர் கோயிலிலும், மற்றொருவர் கர்நாடகாவிலும் அடுத்தவர் அஞ்செட்டிக்கும் தியானம் செய்ய வந்தார். அவர்தான் நூரொந்து சாமி.!












Click it and Unblock the Notifications