காமாட்சி அம்மன் விளக்கு அவசியம்.. காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும்போது செய்யக்கூடாத தவறுகள் இவைதான்
சென்னை: தீப ஒளி இருள் என்ற அறியாமையை போக்கி அருள் என்ற ஆன்மாவை ஆற்றல் மிக்கதாக்குவதால்தான், வீடுகளில் தீபம் ஏற்றப்படுகிறது.. அதிலும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றப்பட என்ன காரணம்? தீராத கடனையும் தீர்த்திட, காமாட்சி விளக்கு போதும் என்று சொல்வதற்கு என்ன காரணம்? இந்த விளக்கின் முக்கியத்துவம் என்ன? காமாட்சி அம்மன் விளக்கு பரிகாரம் என்றால் என்ன? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
விளக்கு ஏற்றுவது என்பது வீடுகளில் சம்பிரதாயமாக உள்ளது.. காலை, மாலை என இரு வேளையும் தீபம் ஏற்றும்போது, துர்கை, சரஸ்வதி, லட்சமி 3 சக்தியும் தீபத்தில் இருப்பதால் ஒளிமயமான முன்னேற்றம் கிடைக்கின்றது. இதனால் குழப்பமான மனம் தெளிவு பெற முடிகிறது.. உள்ளத்திலுள்ள இருளை போக்குகிறது.

காமாட்சி அம்மன் விளக்கின் முக்கியத்துவம்
அந்தவகையில் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவது சிறப்புக்குரியது.. இதற்கு காரணம், அனைத்து தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடக்கம் என்பார்கள்.. பூமியிலுள்ள அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவும் காமாட்சி அம்மன் தவம் செய்ததால், காமாட்சியை வழிபட்டாலே, அனைத்து கடவுள்களின் ஆசியும் கிடைத்துவிடுமாம்.
எனவேதான், திருமணமாகி புதுப்பெண் கணவன் வீட்டிற்குள் சென்றதுமே காமாட்சி அம்மன் விளக்கையே முதலில் ஏற்ற சொல்வார்கள். குலம் தழைத்து, குடும்பத்தில் அனைத்து மங்களமும் உண்டாக தினமும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்ற வேண்டும்..
அதுமட்டுமல்ல, சிலருக்கு தங்களுடைய குலதெய்வம் என்ன என்பது தெரியாத பட்சத்தில் காமாட்சியை குலதெய்வமாக நினைத்து வழிபட முடியும்.. முதல் முதலில் அந்த விளக்கை மணப்பெண் ஏற்றுவதன் மூலம் அந்த குலம் தழைத்து வாழையடி வாழையாக வளரும் என்பது நம்பிக்கையாகும். எனவேதான், வீட்டில் எரிந்த விளக்கை பிறருக்கு எப்போதுமே தரக்கூடாது என்பார்கள்.
கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை இருந்தால், காலை 6 மணிக்கு முன்பு, காமாட்சி அம்மன் விளக்கேற்றி பூஜை செய்வதால், 48 நாளைக்குள் உங்கள் கோரிக்கை நிறைவேறும்.
விளக்குகள் சுத்தமாக இருக்க வேண்டும்
எப்போதுமே வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றும்போது, விளக்குகள் சுத்தமாக இருக்க வேண்டும்.. விளக்கேற்றுவதற்கு முன்தினமே விளக்குகளை பளிச்சென கழுவி சுத்தம் செய்து வைத்துவிட வேண்டும்.
காமாட்சி விளக்கில் 2 பக்கமும் யானைகளின் உருவத்துக்கும் மஞ்சள், குங்குமம், மலர்கள் வைக்க வேண்டும். எனவே, விளக்கில் அதிக சுடர் ஒளிர்ந்து, மஞ்சள், குங்குமம், மலர்களில் படாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.
எப்போதுமே காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி, தாமரைத்தண்டு திரி போட்டு தீபம் ஏற்றினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.. அல்லது நல்லெண்ணெயில் நெய் கலந்தும் விளக்கேற்றலாம்.. ரூ.1 அல்லது ரூ.5 நாணயத்தை இட்டபிறகு திரியிட்டு தீபம் ஏற்றுவது கூடுதல் சிறப்பை பெற்றுத்தரும். நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய்யும் பயன்படுத்தலாம். அதற்காக சமையலுக்கு உபயோகப்படுத்தும் எண்ணெயை ஊற்றக்கூட வேண்டும்..
பிரம்ம முகூர்த்தம் வழிபாடு
காலை பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கேற்றி வழிபட்டால் கூடுதல் சிறப்பு. எனவே, அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட வேண்டும். பிறகு பூஜை அறையிலுள்ள கடவுள் படங்களை பூக்களால் அலங்கரித்து, அரிசி மாவில் கோலம் போட வேண்டும். விளக்கை தரையில் வைக்காமல், கோலமிட்டு, அதன்மீது தட்டு வைத்து அதில் சிறிது பச்சரிசி கொட்டி, பிறகுதான் காமாட்சி அம்மன் விளக்கை வைக்க வேண்டும். அதேபோல, தாம்பாளத்திலும், நீர், பூக்களை தூவி அதன்மீதும் விளக்கு வைக்கலாம்.
காமாட்சி அம்மனுக்கு தினம்தோறும் குங்கும அர்ச்சனை செய்து வர வேண்டும். 108 முறை ஓம் காமாட்சி அம்மனே போற்றி என்ற மந்திரத்தை சொல்லி குங்கும அர்ச்சனை செய்து, கரும்பை நிவேதனமாக வைத்து வந்தால், விரைவில் உங்கள் பிரார்த்தனை நிறைவேறும்..












Click it and Unblock the Notifications