திருமலை திருப்பதியில் ஒரு நாள் உணவை அன்னதானமாக அளிக்க ஆகும் செலவு என்ன தெரியுமா?
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அன்னதானம் செய்ய விருப்பமா? அப்படியென்றால் எவ்வளவு செலவாகும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இது போல் அன்னதானங்களை செய்தால் பாவங்கள் விலகி புண்ணியம் கிடைக்கும்.
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசிக்கிறார்கள். இதே பிரம்மோற்சவம், பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு வருகை தருகிறார்கள். திருப்பதிக்கு வர 3 வழிகள் உள்ளன.

ஒன்று இலவச தரிசனம், இரண்டாவது நடைபாதை தரிசனம் எனப்படும் திவ்ய தரிசனம், 3ஆவது ரூ300 விரைவு தரிசனம். இந்த ரூ 300 விரைவு தரிசனத்திற்கு 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். இது இல்லாமல் சில உற்சவங்களின்போதும் ஏழுமலையானை தரிசிக்கலாம்.
ஏழுமலையான் கோயிலுக்கு வந்துவிட்டால் எல்லோரும் வயிறார இலவச உணவை சாப்பிட்டுவிட்டு செல்லலாம். அந்த வகையில் அனைத்து பக்தர்களுக்கும் சுடச்சுட உணவு பரிமாறப்படுகிறது. இதற்காக லைனில் காத்திருந்து உணவை உட்கொள்ள வேண்டும்.
1990களில் அன்னதானத்திற்கான டோக்கன், வெங்கடாஜலபதியை பார்த்துவிட்டு சுற்றி வரும் பிரகாரத்திலேயே வழங்கப்பட்டு வந்தது. தற்போது எந்த டோக்கனும் இல்லாமல் நேரடியாக போய் வரிசையில் நின்றாலே சுடச்சுட சாப்பாடு கிடைக்கும். சாம்பார், ரசம், மோர், ஒரு பொரியல், துவையல், அப்பளம் , இனிப்பு என அறுசுவை உணவு கிடைக்கிறது.
காசு கொடுத்தால் கூட இத்தனை ருசியாக கிடைக்காது. எனவே திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் உணவுக்காக ஒரு தொகையை செலவு செய்வதை விட்டு இது போல் அன்னதானம் சாப்பிட்டுவிடலாம். ஒரு சில தங்கும் இடங்களின் அருகே காலை 11 மணிக்கு உணவே டிஃபன் போல் வழங்கப்படுகிறது. அது எங்கே என பார்த்துவிட்டு அதையும் உட்கொள்ளலாம்.
இரவு நேரத்திலும் இதையே சாப்பிட்டுவிட்டு ஊரை பார்க்க நடையை கட்ட வேண்டியது. இது போல் அன்னதானத்திற்காக நன்கொடைகளும் பெறப்படுகின்றன. திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா நித்யான்ன பிரசாத கேந்திரா மூலம் தினமும் 60,000 முதல் 70,000 பேருக்கு அரிசி பிரசாதம் வழங்கப்படுகிறது.
மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டிடத்துடன் கூடிய பழைய அன்னதான வளாகம், பிஏசி-2 இல் அன்னபிரசாத விநியோகம் நடைபெறும். அது போல் ரம்பாகிச்சா பேருந்து நிலையம், மத்திய விசாரணை அலுவலகம், பிஏசி-1 ஆகிய இடங்களிலும் உணவு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமைக்கு வரும் பக்தர்கள் பட்டினி கிடக்கக் கூடாது என்பதற்காகவே இத்தனை அன்னதான கூடங்கள் உள்ளன.
இவை அல்லாமல் பக்தர்கள் தரிசனத்திற்கு காத்திருக்கும் போது பசிக்கக் கூடாது என்பதற்காக நன்கு அடர்த்தியான தண்ணீர் கலக்காத பால், மோர், உப்புமா, பொங்கல், சாம்பார் சாதம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. திருமலையில் பக்தர்கள் அன்னதானம் செய்தால் புண்ணியம் கிடைக்கும்.
அதனால்தான் பலர் அன்னதானத்தில் பங்கேற்கிறார்கள். அப்படி திருமலையில் ஒரு நாள் அன்னதானம் செய்ய எவ்வளவு செலவாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திருமலை பக்தர்களுக்கு ஒரு நாள் அன்னதானம் வழங்க சுமார் 38 லட்சம் ரூபாய் செலவாகும். காலை உணவுக்கு ரூ 8 லட்சமும் மதிய உணவுக்கு ரூ 15 லட்சமும் இரவு உணவுக்கு ரூ 15 லட்சம் என மொத்தம் 38 லட்சம் தேவைப்படுகிறது.
இந்த ஒரு நாள் தொகையை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கொடுத்தால் உங்கள் பெயர் காட்சி பலகையில் இடம்பெறும். அன்னதானத்தில் பணம் செலுத்தி பக்தர்கள் தாங்களாகவே அன்னதானத்தை பரிமாறவும் செய்யலாம். திருப்பதியில் அன்னதானத்திற்கான செலவு ரூ 10 லட்சமாக இருந்தது. விலைவாசி உயர்ந்துள்ளதால் அந்த அன்னதானத்திற்கான பணம் தற்போது உயர்ந்துவிட்டது.
அண்மையில் சந்திரபாபு நாயுடுவின் பேரனும், நாரா லோகேஷ் நாயுடுவின் மகனுமான நாரா தேவான்ஷின் பிறந்தநாளையொட்டி நாயுடுவின் குடும்பத்தினர் திருமலை திருப்பதியில் அவரது பெயரில் உணவு வழங்கினர். அப்போது அவர்கள் 38 லட்சம் ரூபாய் செலுத்தி நன்கொடை அளித்ததாக டிஸ்பிளேவில் வெளியிடப்பட்டது. சிறுவனுக்கு கடந்த மார்ச் 21 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதே போல் கடந்த ஆண்டும் சிறுவன் பெயரில் அன்னதானம் வழங்கப்பட்டது. அப்போது ரூ 33 லட்சம் செலவாகியுள்ளது. இந்த ஆண்டு 38 லட்சமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications