தைப்பூசம்.. தை பவுர்ணமி.. சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க முடியுமா? வனத்துறை சொல்வதென்ன?
விருதுநகர்: தை மாத வளர்பிறை பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கோவிலில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில், ஒவ்வொரு மாதமு அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கடந்த 2 மாத காலமாக தொடர்மழையால் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

தற்போது மழை குறைந்துள்ளதால் தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற 23ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்லலாம் என்று வனத்துறை அனுமதி அளித்துள்ளது. காலை 7.00 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலைப்பகுதிகளில் அமைந்துள்ள நீரோடைகளில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரவு நேரத்தில் கோவிலில் தங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கோயிலுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையின் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக சதுரகிரி கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications