நீங்கள் செய்யும் இந்த காரியம்..நல்ல வேலை கிடைக்கும்..புரமோஷன்..சம்பள உயர்வு தேடி வரும்
வேலை தேடுபவர்களுக்கு உடனே வேலை கிடைக்கவும், கிடைத்த வேலையில் பதவி உயர்வுடன் அதிக சம்பளம் கிடைக்கவும் இந்த நான்கு விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தால் போதும்.
சென்னை: பல லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர்கள் எல்லாம் திடீரென வேலை இழக்கிறார்கள். பார்க்கும் வேலை பலரை பாடாய் படுத்துகிறது. சிலரோ திருப்தி இல்லாமல் ஏதோ அலுவலகத்திற்கு போனோம் வந்தோம் என்று வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். அரசு வேலைக்கு தேர்வு எழுதிவிட்டு ஆண்டுக்கணக்கில் காத்திருக்கிறோமே வேலை கிடைக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக்கொண்டிருக்கின்றனர். நல்ல வேலை கிடைக்குமா? புரமோசன் கிடைக்குமா? சம்பள உயர்வும் பதவி உயர்வும் இந்த ஆண்டாவது கிடைக்குமா என்று ஏங்கிக் தவிப்பவர்கள் சில பரிகாரங்களை செய்ய வேண்டும்.
படித்து முடித்து விட்டு வேலை கிடைக்கவில்லையே என்று கவலைப்படுபவர்கள் தினசரி சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். நிரந்தர வருமானத்தை நிலையான வேலை வாய்ப்பை தரக்கூடிய சக்தி சூரிய பகவானுக்கு உண்டு. சூரிய பகவானை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு நிச்சயமாக நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும். தேவைக்கு ஏற்ப மாதம்தோறும் நிலையான வருமானம் கைக்கு வந்து கொண்டே இருக்கும். பணப்பற்றாக்குறை என்ற வார்த்தைக்கு இடம் இல்லை.

ஜாதகத்தில் கர்மஸ்தானம் எனப்படும் 10ஆம் வீடு தொழில் ஜீவனஸ்தானம் ஆகும். 6ஆம் வீடு என்பது நாம் செய்யும் தொழிலைக் குறிக்கும் வீடாகும். 7ஆம் வீடு என்பது வியாபாரத்தைக் குறிக்கும். 2ஆம் வீடு என்பது தனஸ்தானம் நமக்கு வேலையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை குறிக்கும். 11ஆம் வீடென்பது லாபஸ்தானம். ஆக 2, 6, 10, 11ஆம் வீடுகளைக் குறிக்கின்ற தசா, புக்தி, அந்தரத்தில் வேலை கிடைக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் 10 ஆம் இடமான ஜீவனஸ்தானத்தில் குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் இருந்தால் சீக்கிரம் நல்ல வேலை கிடைக்கும். சனி இருந்தால் வேலை கிடைக்கவே தாமதமாகும். வேலை கிடைத்தாலும் செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளம் கிடைக்காது.
வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்கு மிகவும் காத்திருக்க வேண்டும். செவ்வாயிருப்பின் செய்யும் தொழிலில் பிரச்சனைகள், சண்டை, சச்சரவு போன்றவை இருக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, சூரிய நமஸ்காரம் செய்ய மறந்துவிடாதீர்கள். சூரிய பகவான் அருள் இருந்தால் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். அரசு தொடர்பான இடங்களில் வேலைக்காக முயற்சி செய்பவர்கள் தினசரியும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். ஞாயிறுக்கிழமைகளில் கோதுமை தானம் செய்ய வேண்டும்.

முதல் கடவுளான கணபதியை வழிபட்டால் நம் வேண்டுதல் முழுமையடையும். சதுர்த்தி நாளில், விநாயகரை வழிபட்டால் அரசு வேலை கைகூடி வரும். தினமும் காலை அரசமரத்தடி விநாயகருக்கு தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்யுங்கள். அதுவும், அதிகாலை 4 மணியளவில் செய்தால் அவர் மனம் குளிர்ந்து உங்களுக்கு அரசாங்க வேலை உடனே கிடைக்க செய்வார்.
திங்கட் கிழமைகளில் சிவன் கோவிலுக்கு சென்று அரிசிமாவு மற்றும் பால் கொண்டு பாலாபிஷேகம் செய்யுங்கள். வில்வ மாலை சாற்றி வணங்க சிவன் மனம் குளிர்ந்து அருள்புரிவார். இதனால் அரசு வேலை கிடைப்பதில் உள்ள தடைகள் நீங்கும்.
ஆஞ்சநேயரை வணங்கி தினமும் அனுமன் சாலிசா படிப்பவர்களுக்கு வேலை தொடர்பான பிரச்சினை நீங்கும். தினமும் சொல்ல முடியாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் மட்டுமாவது அனுமன் சாலிசாவை கட்டாயமாக படிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது
வேலை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் பெண்களாக இருந்தால் ஹேண்ட் பேக்கில் சிவப்புநிற துணியை பயன்படுத்துங்கள். ஆண்களாக இருந்தால் ஒரு சின்ன சிகப்பு நிற துணியை எப்பொழுதும் வைத்திருந்தால் நாம் தேடும் முயற்சிகளுக்கு எல்லாம் வெற்றி கிடைக்கும். சிகப்பு நிறம் மங்களமான ஒரு செயலை குறிக்கக்கூடியது. சிவப்பு நிறத்திலான துணி நம்மிடம் இருக்கும் பொழுது நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும்.

செவ்வாய்க்கிழமையில் கோவிலுக்கு சென்று கோவில் அருகில் உணவில்லாமல் அமர்ந்திருப்பவர்களுக்கு மஞ்சள் நிற தோல் உடைய வாழைப்பழத்தை தானமாக கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. மஞ்சள் நிறம் குரு பகவானுக்கு உகந்த நிறமாக சொல்லப்பட்டிருக்கிறது. குருவானாவர் பணத்திற்கு அதிபதியான கிரகம். இந்த தானத்தின் மூலம் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும், அது மட்டும் இன்றி வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் பதவி உயர்வுடன் கூடிய சம்பளமும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. செவ்வாய் வெள்ளி கிழமையில் ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வர வேலையில் வெற்றி தேடி வரும்.
பசு நம் வீட்டின் அருகே நாம் கண்ணார காணும் தெய்வம். பசு மாட்டிற்கு கீரையோ, வெல்லமோ அல்லது கோதுமைமாவோ கொடுத்து வர நல்ல வேலை கிடைக்கும்.புரமோசனும் சம்பள உயர்வும் நிச்சயம் தேடி வரும்.












Click it and Unblock the Notifications