உங்க வீட்டில் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? இந்த விசயத்தை ஃபாலோ பண்ணுங்க..சக்சஸ் வாஸ்து டிப்ஸ்
சென்னை: பஞ்சபூத சக்திகளையும் கொண்ட நமது வீட்டில் நேர்மறை சக்தியை அதிகரிக்க சரியான திசையில் சரியான பொருட்களை வைக்க வேண்டும். நம்முடைய வீட்டின் நிலைவாசல் தொடங்கி, கதவு ஜன்னல் போன்றவை சரியான திசையில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். நம்முடைய வீட்டில் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளையும் சரியான இடத்தில் வைத்து பயன்படுத்தினால் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். பணம் மழையாக பொழியும். வறட்சியின்றி செல்வ வளம் அதிகரிக்கும்.
வாஸ்துபடி வீடு கட்டுவது மட்டுமல்லாது அந்த வீட்டில் வைக்கும் பொருட்களும் வாஸ்துபடி அமைக்க வேண்டும். அப்படி அமைந்தால்தான் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். மன அமைதியும் நிம்மதியும் கூடும்.

வீட்டின் கிழக்கு திசையில் தலைவாசல் அமைக்க வேண்டும். அப்படி தலைவாசல் வேறு திசையில் அமைக்க நேரிட்டால் கிழக்கு திசையில் ஜன்னல் அமைக்க வேண்டும். இதன் மூலம் காற்றும் சூரிய ஒளியும் நேரடியாக நமது வீட்டிற்குள் நுழையும் இதன் மூலம் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
வடகிழக்கு திசையில் பிரதான நுழைவாயில் அமையலாம் அதே நேரத்தில் அந்த இடத்தில் மாடி படிக்கட்டு அமைப்பது வாஸ்து படி தவறு. இதனால் வீட்டிற்குள் அதிர்ஷ்டம் வருவது தடைபடும்.
வடக்கு மற்றும் கிழக்கு இந்த இரண்டு திசைகளும் நுழைவாயிலுக்கு மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இந்த திசையில் அமைந்த வாசலில் முன் செருப்புகளை வைக்கும் ஸ்டாண்டுகளை வைக்கக்கூடாது. அப்படி வைப்பதால் நேர்மறை ஆற்றல் குறைந்து எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். பூஜை அறை அமைப்பதற்கு வடகிழக்கு திசை மிகவும் பொருத்தமான திசையாகும்.
தென்கிழக்கு திசையில் தான் அக்னி ஆட்சி செய்கிறார் ஆகையால் சமையலறை தென்கிழக்கு திசையில் அமைந்திருக்க வேண்டும். சமைக்கும் நபர் கிழக்கு நோக்கி சமைக்கும் வகையில் மேடையை அமைத்திருக்க. வேண்டும். நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். சமையலின் சுவையும் கூடுவதோடு ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
பணத்தை ஈர்க்க, பொருளாதாரம் முன்னேற ஈசான்ய மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த பகுதியில் தண்ணீர் தேங்காமலும், கழிவு நீர் தேங்காமலும் இருக்க வேண்டும். ஒரு சிலர் வீட்டில் உள்ள குப்பைகளை ஈசான்ய மூலையில் குவித்து வைப்பார்கள் இது தவறான செயல்.

உங்கள் வீட்டின் மையப் பகுதி பிரம்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் வடகிழக்கு திசையைப் போலவே சுத்தமாகவும், காலியாகவும் வைத்திருக்க வேண்டும். வீட்டின் மையப்பகுதியில் சோஃபாக்கள், மேஜைகள், டைனிங் டேபிள் போன்ற கனமான பொருட்களை குவித்து வைத்திருக்கக் கூடாது. ஈசான்ய மூலை பகுதியைப் போல மையப்பகுதியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீட்டின் அனைத்து குழாய்களும் சரியாக இருக்க வேண்டும். கொஞ்சம் தண்ணீர் ஒழுகினாலும் உடனே அதனை மாற்றிவிடுங்கள். வீட்டின் வடமேற்கு பகுதியில் தேவையற்ற பொருட்களை வைத்திருக்கக் கூடாது, இருள் நிறைந்திருக்கக்கூடாது இதனால் வீட்டின் உள்ள பெண்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படலாம்.












Click it and Unblock the Notifications