கார்த்திகை தீபவிழாவிற்கு தயாராகும் திருவண்ணாமலை.. அண்ணாமலையார் கோவிலில் பந்தகால்.. மகாதீபம் எப்போது?
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் நடைபெற உள்ளதை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு வருகிற நவம்பர் 26ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. 60 நாட்களுக்கு முன்பு இருந்தே விழா ஏற்பாடுகளை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். தீபத்திருவிழாவிற்காக முன்னேற்பாடாக இன்று காலை பந்தக்கால் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டு வழிபட்டனர்.

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருப்பது திருவண்ணாமலை. தட்ஷிண கைலாயம் என்றும் பக்தர்களால் அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் சிவலிங்கமே மலையாக காட்சியளிப்பதாக ஐதீகம். இந்த மலையை இன்றைக்கும் ஏகப்பட்ட சித்தர்கள் அரூபமாக கிரிவலம் வருகின்றனர். இங்குள்ள மலையானது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக வரலாற்று ஆய்வாலர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் கூட கார்த்திகை மாதத்தில் நடைபெறும் தீபத்திருநாளும், அதையொட்டி 10ஆம் நாள் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்வு தான் அனைத்திற்கும் சிகரம் வைத்தார் போல் இருக்கும். இந்த மகா தீப தரிசனத்தை காண்பதற்கே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் வருவதுண்டு.
கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில், பரணி தீபம், அண்ணாமலையார் தீபம் மகா தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக்கார்த்திகை தீபம் என ஐந்து நாட்கள் தீபங்கள் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் தீபத்திருவிழாவில் பங்கேற்பார்கள்.
மகாதீபத்திருவிழாவினை முன்னிட்டு பூர்வாங்க பணிகள் தொடங்குவதற்கான பந்தக்கால் நடும் முகூர்த்த விழா இன்று அதிகாலை 5.30 மணிக்கு மேல் நடைபெற்றது. விழாவையொட்டி சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பந்த கால் நடும் நிகழ்ச்சிக்கான சிறப்பு பூஜைகள் அங்கு வைத்து செய்யப்பட்டது. பின்பு அங்கிருந்து ஊர்வலமாக வந்து ராஜகோபுரம் முன்பு பந்தக்கால் முகூர்த்தம் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டன.
இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று தொடங்கி நவம்பர் மாதம் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் நவம்பர் 26ஆம் தேதி மாலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது.
2668 அடி உயர மலை உச்சியில் 5 அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மகாதீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் நடனமாடியபடி காட்சி அளித்த பின்னர் சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்படும். அந்த விளக்கு ஒளி தென்பட்ட மகாதீபம் அப்போது தமிழகம் முழுவதும் வீடுகளிலும் அனைவரும் தயாராக வைத்திருந்த விளக்குகளை ஏற்றி அண்ணாமலைக்கு அரோகரா என்று முழக்கமிட்டு வணங்குவார்கள்.












Click it and Unblock the Notifications