கந்த சஷ்டிக்கு 7 நாட்கள் விரதம் இருக்க முடியலயா.. முருகன் அருள் பெற.. இன்றைக்கு இதை மட்டும் பண்ணுங்க
சென்னை: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் இன்று நடப்பதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். சஷ்டி விரதம் முழுமையாக இருக்க முடியாதவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் விரதம் இருந்தால் கூட முருகப் பெருமானின் அருளை பெறலாம். காலை முதல் உணவு அருந்தாமல் மாலை மட்டும் பச்சரிசி சாதம் உண்ணலாம்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிகவும் சிறப்பு மிக்கது கந்தசஷ்டி திருவிழாவாகும். சாதாரணமாக திருச்செந்தூர் முருகப் பெருமானின் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

விரதம் இருப்பவர்கள்: கந்த சஷ்டி திருவிழாவிற்கு பல லட்சம் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி திருவிழா, கடந்த 2 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் கோயிலில் உள்ள கொட்டகைகளில் பக்தர்கள் விரதம் இருந்து வருகிறார்கள். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த தண்ணீரில் தினமும் 2 நேரம் குளித்து, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும்.
7 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள்: சஷ்டியில் 7 நாட்களும் அருகிலுள்ள முருகப்பெருமான் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தை கேட்பதும் அவசியம். 7 நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள், சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதுவும் சாப்பிடாமல் இருக்கலாம். காலை முதல் உணவருந்தாமல் மாலை சூரசம்ஹாரம் முடிந்த பிறகு பச்சரிசி சாதம் உண்ணலாம். காலை 2, மதியம் 2, மாலை 2 மிளகு சாப்பிட்டு விரதத்தை முடித்து, முருகன் அருளை பெறலாம்.
என்னென்ன செய்யக்கூடாது: விரதத்தின் போது, இரவு தரையில் கம்பளம் விரித்து தான் தூங்க வேண்டும். சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் கந்தசஷ்டி கவசம் படிக்கலாம் அல்லது ஓம் சரவண பவ மந்திரத்தையும், முருகா என்ற திருநாமத்தையும் நாள்தோறும் உச்சரிக்க வேண்டும்.. சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது... யாரையும் திட்டவோ, கோபமாக பேசவோ கூடாது.
இன்று சூரசம்ஹாரம்: சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளி, கடற்கரையில் சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறும். சூரசம்ஹாரத்தை காண திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்துள்ளனர். தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கர்கள் திருச்செந்தூருக்கு வருகை தந்துள்ளனர்.
சிறப்பு பஸ்கள்: பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல, ரயில்களும் இயக்கப்படுகின்றன. மதுரை, நாகர்கோவில், திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வங்க கடலோரம் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்களும் கடல் அலை போல திரண்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்பு: பக்தர்களின் பாதுகாப்பு கருதி, கடற்கரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 7-ம் திருநாளான நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசேஷ பூஜைகளும் அபிஷேகமும் நடைபெறும். இரவு சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறுகிறது












Click it and Unblock the Notifications