சந்திர கிரகணம்.. வான வேடிக்கையை ரசிக்க தயாராகுங்கள்.. கோவில்களில் நடை அடைப்பு
சென்னை: இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. கிரகணம் இந்தியாவில் தெளிவாக தெரியும் என்பதால் கோவில்களில் தரிசன நேரங்களிலும் பூஜை நேரங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பூமி, சந்திரன், சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திரகிரகணம் நிகழ்கிறது. ஐப்பசி பவுர்ணமி தினமான இன்று
நள்ளிரவில் 1:05 மணிக்கு துவங்கி 2:24 மணிக்கு முடியும். கிரகணத்தின் காலம் 1 மணி நேரம் 19 நிமிடங்கள் இருக்கும். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இதை பார்க்க முடியும். கண் விழித்து இருப்பவர்கள் வானத்தில் நிகழப்போகும் வேடிக்கையை ரசிக்கலாம்.

இந்தியா மட்டுமல்லாமல் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா கண்டத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட கிழக்கு அரைக்கோளத்தின் சில பகுதிகளில் சந்திர கிரகணம் தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
சந்திர கிரகண நேரம் தோஷ காலமாக கருதப்படுவதால் பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை இரவு 1.05 மணி முதல் இரவு 2.23 முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது ஆகவே நாளை இரவு 7 மணி முதல் நடைசாத்தப்படுகிறது. 29ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோவில் உள்பட அனைத்து உபகோவில்களிலும் இரவு 8 மணிக்கு அர்த்தசாம பூஜை செய்து நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்ததும் அனைத்து கோவில்களும் சுத்தம் செய்யப்பட்டு பின்னர் நாளை 29ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறந்து கலசபூஜை, கலச அபிஷேகம், நைவேத்தியம், தீபாராதனை மற்றும் நித்ய பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பவுர்ணமி தினமான இன்று பிற்பகல் 3 மணிக்கு விளக்குபூஜை நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு சாயராட்சை பூஜை முடிந்தவுடன் மாலை 6 மணிக்கு எல்லாம் நடை சாத்தப்படும்.ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் இணை ஆணையர் கல்யாணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கிரகண நேரங்களில் திருநள்ளாறு சனிபகவான் ஆலயம், காளஹஸ்தி, ராகு கேது தலங்களில் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications