அழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம்.. மாட்டு வண்டியில் பயணம்.. மலை எங்கும் எதிரொலித்த கோவிந்தா முழக்கம்
மதுரை: அழகர் கோவில் ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சமேதராக தேரில் பவனி வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டம் காண மாட்டு வண்டிகளில் பல கிலோ மீட்டர் பயணம் செய்து வந்துள்ளனர் பக்தர்கள்.
மாட்டு வண்டி பயணம்: மதுரை மாவட்டம் அழகர்கோவில் கள்ளழகர் ஆடித் தேரோட்டத்தில் பங்கேற்க சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிப்பவர்கள் குலதெய்வ வழிபாட்டுக்காக பாரம்பரியம் மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணித்தனர். அழகர் கோவில் பகுதிகளில் எங்கும் மாட்டு வண்டிகளிலும் கூடாரங்களுமாக காணப்படுகின்றன.

அழகர் கோவில்: மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர் கோவில். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று. சித்திரைத் திருவிழாவின்பொழுது, கள்ளழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார். இந்த விழா மதுரையில் வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ் பெற்றது. அழகர் மலை கள்ளழகர் கோவிலில் ஆடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
ஆடித்திருவிழா: மதுரை அழகர்கோவில் கள்ளழகர் ஆடிபெருந்திருவிழா கடந்த 24 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 10 நாட்கள் ஆலயத்தில் விழா நடைபெறும் நிலையில் ஒவ்வொரு நாளும், தங்க பல்லக்கில் எழுந்தருளி, அன்னம், கருடவாகனம், சேஷ வாகனம், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் கள்ளழகர் எழுந்தருளி அருள்பாலித்தார். நேற்று மாலையில் தங்கக்குதிரை வாகனத்தில் அழகர் காட்சி அளித்தார். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடித்தேரோட்டம்: ஆடித்தேரோட்டம் இன்று காலை 6 மணிக்குத் தொடங்கியது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கள்ளழகர் ஸ்ரீதேவி பூதேவி தாயார் சமேதராக பவனி வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர். கோவிந்தா! கோவிந்தா என பக்கர்கள் எழுப்பிய முழக்கம் அழகர் மலை எங்கும் எதிரொலித்தது. தேரடி வீதிகள் வழியாக ஆடி அசைந்து வந்த திருத்தேரினை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
கோவிந்தா முழக்கம்: சித்திரைத் திருவிழா போன்றே ஆடித் திருவிழாவும் அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. ஏராளமானோர் மாட்டு வண்டி கண்டிக்கொண்டு வந்து தங்கள் குல தெய்வமான கள்ளழகரை தரிசனம் செய்தனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை மாலையில் புஷ்ப சப்பரம், 03ஆம் தேதி வியாழக்கிழமை உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.
பாரம்பரிய குல தெய்வ வழிபாடு: கள்ளழகரை ஏராளமானோர் தங்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். அதே போல பதினெட்டாம் படி கருப்பசாமியை குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். ஆடி மாதத்தில் தங்களின் குல தெய்வத்தை வழிபட காரைக்குடி சுற்றுவட்டார பகுதி மக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்கின்றனர். பாரம்பரிய முறைப்படி 18 கிராம மக்கள் மாட்டு வண்டியில் வந்து அழகர் கோவிலில் தங்கியுள்ளனர். நேற்று ஏராளமானோர் முடி காணிக்கை செலுத்திவிட்டு தீர்த்தமாடினர். பின்னர் கிடா வெட்டி பொங்கல் வைத்து அன்னதானம் அளித்தனர். இன்று தேரோட்டத்தை பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இந்த திருவிழாவில் பங்கேற்க சிங்கப்பூர், மலேசியா, குவைத் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ளனர். இந்த பயணத்திற்காகவே மாட்டு வண்டிகளையும் மாடுகளையும் பராமரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications