வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் உடுத்தும் பட்டாடையில் இத்தனை விஷயங்களா? அந்த பெரிய பெட்டி!
மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது அவர் என்ன நிறத்தில் பட்டாடை உடுத்தியிருக்கிறாரோ அதற்கேற்ப அந்த ஆண்டின் பலன்கள் கணிக்கப்படுகின்றன.

மதுரை சித்திரை திருவிழா உலக அளவில் மிகவும் பிரபலம். இந்த திருவிழா காண பலர் மதுரைக்கு வருவது வழக்கம். அது போல் மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் இருந்து பணி நிமித்தமாகவும், படிப்புக்காக சென்றவர்களும் கூட இந்த திருவிழாவிற்கு வந்து செல்வதுண்டு.
அந்த வகையில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த வியாழக்கிழமை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் நாளை கள்ளழகர் எதிர்சேவை நடைபெறுவதால் மதுரை அழகர்கோவிலிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார். வரும் 12 ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடக்கிறது.
அப்போது அவர் பட்டாடை உடுத்திக் கொண்டு இறங்குவது வழக்கம். அந்த பட்டாடையின் நிறத்தை வைத்தே இந்த ஆண்டு நல்லது கெட்டதை மக்கள் தீர்மானிப்பர் என்கிறார்கள். இதனாலேயே அழகர் என்ன நிற ஆடை உடுத்துவாரோ என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடம் காணப்படுகிறது.
அழகர் உடுத்தும் ஆடைகளும் அணியும் தங்க நகைகளும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்த பெட்டியில் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா உள்ளிட்ட நிறங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த நிறத்தில் புடவை கட்டி ஆற்றில் இறங்குவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக தலைமை பட்டர், அழகரை வேண்டிக் கொண்டு அந்த பெட்டிக்குள் கையை விட்டு துழவுவார். அப்போது எந்த நிறம் கிடைக்கிறதோ அந்த நிறத்தை கள்ளழகருக்கு உடுத்துவார்களாம். பச்சை கட்டி வந்தால் நாடு செல்வச் செழிப்பாக இருக்கும் என்பது ஐதீகம். கடந்த சில ஆண்டுகளாக அழகர் பச்சை பட்டுடுத்தி ஆற்றில் இறங்கினார்.
வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம். பார்க்கலாம் நாளை மறுநாள் அழகர் என்ன புடவை கட்டி வருகிறார் என்று!












Click it and Unblock the Notifications