சித்திரையில் மதுரை வரும் கள்ளழகர்.. ஏப்ரல் 23ல் வைகையில் இறங்குகிறார்.. வெள்ளம் பெருகுமா?
மதுரை: அழகர் மலையில் இருந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக ஏப்ரல் 21ஆம் தேதி புறப்படுகிறது. 22ஆம் தேதி எதிர்சேவை நிகழ்ச்சியும் 23ஆம் தேதி கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெற உள்ளது. கோடை மழை பெய்து வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும் என்று பக்தர்கள் வருணபகவானை வேண்டிக்கொண்டுள்ளனர்.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடிந்தவுடன் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடங்குகிறது.
அதன்படி வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அழகர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 20ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு மேல் கள்ளழகர் கோவிலில் உள்ள தோளுக்கினியானின் திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி எழுந்தருளுகிறார்.

21ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மேல் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து கள்ளழகர் கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி சுந்தர்ராஜ பெருமாள் தங்க பல்லாக்கில் மதுரைக்கு புறப்பாடாகிறார். அப்பன் திருப்பதி, பொய்கைக்கரைபட்டி, கள்ளந்திரி என வழிநெடுகிலும் நூற்றுக்கணக்கான மண்டகப்படிகளில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
மறுநாள் 22ஆம் தேதி அதிகாலையில் மதுரை மூன்று மாவடி பகுதியில் எதிர்சேவை நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள். சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி கோவிந்தா.. கோவிந்தா என்று முழக்கமிட்டு எதிர்கொண்டு அழைப்பார்கள்.
ஏப்ரல் 23ஆம் தேதி காலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் மதுரை வைகையாற்றில் இறங்கும் வைபவம் நடக்கிறது. அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதனைத் தொடர்ந்து மதியம் ராம ராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் நடக்கிறது. தொடர்ந்து அண்ணாநகர் வழியாக இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் அழகர் எழுந்தருளுகிறார்.
24ஆம்தேதி காலை அங்கிருந்து புறப்பாடாகி கருட வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு முதல் விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
25ஆம் தேதி அதிகாலை மோகினி அவதாரத்தில் காட்சியளிக்கும் கள்ளழகர் பிற்பகலில் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளி ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு புறப்பாடாகிறார். இரவு பூப்பல்லக்கில் சுவாமி காட்சியளிக்கிறார்.
மறுநாள் ஏப்ரல் 26ஆம் தேதி அழகர்மலைக்கு புறப்பாடாகும் அழகர் 27ஆம்தேதி காலை 11 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார். 28ஆம் தேதி உற்சவ சாற்று முறையுடன் கள்ளழகர் கள்ளழகர் சித்திரை பெருவிழா முடிவடைகிறது. மேற்கண்ட தகவலை கோவில் செயல் அலுவலர் கலைவாணன் தெரிவித்துள்ளார்.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துள்ளது. குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இதனிடையே கள்ளழகர் மதுரைக்கு வரும் முன்பாக கோடை மழை பெய்து வைகையில் வெள்ளம் பெருக்கெடுக்க வேண்டும் என்று வருண பகவானை மதுரைவாசிகள் வேண்டிக்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications