திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 9: மாட மாளிகை! பஞ்சுமெத்தையை விடுங்கள்! வைகுண்டம்தான் நிலையானது!
திருப்பாவை - பாடல் 9
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: நவரத்தினங்களால் கட்டப்பட்ட மாளிகையில் சுற்றி விளக்கெரிய நறுமண திரவியம் மணம் வீச, அழகான பஞ்சு மெத்தையில் தூங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே! உன் வீட்டு கதவை திறப்பாய்! எங்கள் அன்பு மாமியே! அவளை நீங்களாவது எழுப்புங்கள். உங்கள் மகளை எவ்வளவு நேரமாக எழுப்பினாலும் அவர் பதிலே சொல்லவில்லையே! அவள் என்ன ஊமையா, இல்லை செவிடா, சோம்பேறித்தனம் அவளை ஆட்கொண்டு விட்டதா, அல்லது படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாதபடி மந்திரத்தில் சிக்கி விட்டாளா? உடனே எழுந்திரு! எங்களுடன் இணைந்து மாயங்கள் செய்பவன்! வைகுண்டத்திற்கு அதிபதியான அந்த நாராயணனின் திருநாமங்களைச் சொல்லேன்!
விளக்கம்: என்னதான் மனிதர்கள் சொகுசு வாழ்க்கையில் சோம்பலில் சிக்கி கிடந்தாலும் அவர்கள் வைகுண்டத்தை அடைய திருநாமங்களைச் சொல்ல வேண்டும்.
திருவெம்பாவை பாடல் - 9
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் அங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார்
அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய் பணி செய்வோம்
இன்னவகையே எமக்கு எம் கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: பழமைக்கு பழமையான பரம்பொருளேஒ இன்னும் லட்சம் ஆண்டுகள் ஆனாலும் இப்படித்தான் இந்த உலகம் இருக்கும் என கணிக்கப்படும் புதுவைக்கெல்லாம் புதுமையான ஈசனே! உனது அடியார்களுக்கு நாங்கள் அடிபணிவோம். அவர்களுக்கு தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வர வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி பணி செய்வோம். எங்களின் பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால் உனது கருணையால் எங்களுக்கு எந்த குறையும் இல்லாமல் நாங்கள் வாழ்வோமே!
விளக்கம்: தங்கள் கணவர் வசதிப் படைத்தவராக இருத்தல் வேண்டும், அழகாக சிவப்பாக இருக்க வேண்டும், பணக்காரராக இருக்க வேண்டும் என்றெல்லாம் பிரார்த்தனைகள் பெருகிவிட்ட காலம் இது! ஆனால் அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பக்திமானாக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டினார்கள். செல்வச் சீமான்களால் நிம்மதி கிடைக்காது. பக்திமான்களை மணந்தால் எளிய வாழ்வு அமையும் என்கிறது இந்த பாடல்.












Click it and Unblock the Notifications