திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 24: கண்ணனை பற்றியது! குழந்தைகள் இந்த பாசுரத்தை படிக்க வேண்டும்
திருப்பாவை - பாடல் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: மகாபலி சக்கரவர்த்தி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில் அதை மூன்று அடிகளால் அளந்து அனைத்தும் உன்னுடையது என உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம், ராமாவதாரம் எடுத்த போது சீதையை மீட்க தெற்கில் உள்ள இலங்கைக்குச் சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்திற்கு நமஸ்காரம், கண்ணன் மூன்றாம் மாதத்தில் குப்புற கவிழ்ந்த நாளில் மங்கல நீராடி புத்தாடை அணிவித்து பால் ஊட்டி ஒரு கட்டை வண்டியின் அடியில் நிழலாக படுக்க வைத்துவிட்டு யசோதை தன் காரியங்களைத் தொடர்ந்து செய்ய ஆரம்பித்தாள். பச்சிளங்குழந்தை தன் கை,கால்களை உதைத்து கொள்ளுமல்லவா, அது போலவே தானும் செய்தது. சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! கோவரத்தனகிரியை குடையாக்கி ஆயர்குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் வீரச் செயல்களைப் பாடி உன்னருளைப் பெறுவதற்கு இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள்.
விளக்கம்: குழந்தை கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரத் தீரச் செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் - 4
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பாடல் பொருள்: அதிகாலை பொழுதில் வீணைக் கலைஞர்களும் யாழ் வாசிப்பவர்களும் இசை மீட்டியபடி ஒரு புறம் உன் பக்தியில் லயித்து நிற்கிறார்கள். 4 வேதங்களால் உன்னை வணங்குவோரும், தமிழ் தோத்திரப் பாடல்களை பாடுவோர் ஒரு புறமும் உன் சிறப்பை பாடிக் கொண்டிருக்கிறார்கள். நமசிவாய என்ற நாமத்தை சொல்லியபடி கையில் மலர்மாலைகளுடன் பக்தர்கள் நிற்கிறார்கள். கண்களில் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்வோரும் நிற்கிறார்கள். தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிடுவோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்ளின் பக்திக்கு முன்பு என் பக்தி சாதாரணம் என மாணிக்கவாசகர் கூறுகிறார்.
விளக்கம்: இறைவன் கண்களை மூடினால் இந்த பூலோகம் என்னவாவது? ஆயினும் அவர் மீதான அன்பின் காரணமாக அவருக்கும் ஓய்வு கொடுக்கிறோம். ஆனால் உண்மையில் பள்ளியறை என்றால் விழிப்புடன் இருப்பது, அதனால்தான் மாணவர்கள் படிக்கும் இடத்திற்கு பள்ளிக் கூடம் என்ற பெயர் உள்ளது.












Click it and Unblock the Notifications