திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 25: இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன்!
திருப்பாவை - பாடல் 25
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: தேவகியின் மகனாக பிறந்து அன்றைய தினம் கம்சனின் கொடூர குணத்திற்காக ஒரே நாள் இரவில் யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காக சென்ற கண்ணனே! அவ்வாறு வளர்ப்புத் தாயிடம் வளர்ந்ததையும் கம்சனால் பொறுத்துக் கொள்ள முடியாமல் உன்னை அழிக்க நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில் அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை தேடி வந்தோம். நீ அருள் தந்தால், உனது செல்வச் சிறப்பையும் உனது பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் வாழ்வோம்.
விளக்கம்: பக்தி செலுத்தினால் இறைவன், பக்தனுக்கு சேவகனாகிவிடுகிறார். இதை பிரகலாதனுக்கும் இரணியனுக்கும் இடையே நடந்த வாதத்திலேயே பார்த்திருக்கிறோம். நரசிம்மர் அவதாரம் எடுத்த பெருமாள் இரணியனை வதம் செய்த காட்சிகளை படித்திருக்கிறோம்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் - 5
பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக்கண்டறிவாரை
சீதங்கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா!
சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து
ஏதங்களறுத்து எமை யாண்டருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
பாடல் பொருள்: சிவபெருமானே, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களிலும் நிறைந்திருக்கிறாய், உனக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. பக்தர்கள் இந்த பெருமைகளை சொல்லி ஆடுகிறார்கள். இப்படி பாடியாடுபவர்களும் உன்னை நேரில் பார்த்ததில்லை. அப்படிப்பட்ட நீ எங்கள் முன்பாக வந்து எங்கள் பாவங்களை எல்லாம் தீர்த்து எங்களை ஆட்கொள்ள வேண்டும். எனவே தூக்கத்திலிருந்து எழுந்திருவாயாக!
விளக்கம்: இறைவன் பிறப்பும் இறப்பும் இல்லாதவன். எத்தனை நூல்களை ஆய்வு செய்தாலும் அவனுடைய மூலத்தை அறிந்து கொள்ள முடியாது. நம் சக்திக்கு மீறிய அந்த சிவனை பாடினாலே நம் கண்ணுக்கு புலப்படுவான்.












Click it and Unblock the Notifications