திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 13: தூக்கமும் ஒரு திருட்டுதான்!வயதான பிறகு பாசுரம் எதற்கு?
திருப்பாவை - பாடல் 13
புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: பறவை வடிவத்தில் வந்த பகாசுரனின் வாயை பிளந்தவன், ராமனாக அவதாரம் எடுத்த போது சீதை களவாண்டு சென்ற இலங்கை மன்னன் ராவணின் தலையை கிள்ளி எறிந்தவன். இப்படிப்பட்ட ஸ்ரீமன் நாராயணனின் புகழை பாடிக் கொண்டு எல்லோரும் நோன்பு நோற்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். வியாழன் என்னும் கோள் மறைந்துவிட்டது. வெள்ளி என்ற கோள் உதயமாகிவிட்டது. பறவைகளின் ஒளி கேட்கவில்லையா, குளிர்ந்த நீரில் நீராடி கண்ணனிடம் வரம் பெறுவதை விட்டுவிட்டு இப்படி தூங்கலாமா தோழியே! தூக்கம் எனும் திருட்டை விட்டுவிட்டு எழுந்து வா!
விளக்கம்: கள்ளம் தவிர்ந்து என ஆண்டாள் பாடுகிறாள். தூக்கம் என்பது ஒரு திருட்டுத்தனம் என்கிறார். அதாவது பொருளை திருடினால்தான் திருட்டு என்றில்லை, நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டுதான். வயதான பிறகு திருப்பாவையை படிக்கலாமே என நினைக்கக் கூடாது. இளமையிலேயே பகவானின் நாமத்தை சொல்லுங்கள்.
திருவெம்பாவை பாடல் - 13
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: கருமையான குவளை மலர்கள் குளத்தில் பூத்துக் குலுங்கியுள்ளன. சிவப்பு நிறத்தில் தாமரை மலர்களும் இருக்கின்றன. இந்த குளத்திற்கு குளிப்பதற்காக மக்கள் வருகிறார்கள். அவர்கள் நமசிவாய என சொல்கிறார்கள். இதனால் எங்களுக்கு இந்த குளம் சிவன் - பார்வதி போல் தோற்றமளிக்கிறது. இந்த குளத்தில் சங்குகள் சலசலக்க, சிலம்புகள் கலகலக்க மார்புகள் விம்ம பாய்ந்து நடுவில் சென்று நீராடுவோம்.
விளக்கம்: சாதாரண குளத்தில் குளித்தால் அழுக்கு நீங்கும். ஆனால் குவளை மலர்களும் தாமரை மலர்களும் இருக்கும் குளத்தில் குளித்தால் மனதில் உள்ள அழுக்கு நீங்கும்.












Click it and Unblock the Notifications