திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 8: சூரியன் வந்ததும் பனி விலகுவது போல் ஆணவத்தை நீக்குகிறார் சிவன்!
திருப்பாவை - பாடல் 8
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பாடல் பொருள்: அன்பானத் தோழியே! அழகியே! கிழக்கே வானம் வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லா தோழிகளும் நீராட வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லாம் உடனே நீர் நிலையில் இறங்கி நீராட என்னை அவசரப்படுத்துகிறார்கள். நான்தான் உன்னை விட்டு நீராட மனமில்லாமல் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளேன். உன்னை கூவி கூவி அழைக்கிறோம். கேசி எனும் அரக்கன் குதிரை வடிவத்தில் வந்த போது அதன் வாயை பிளந்து கொன்றான் அந்த தேவாதி தேவனுமான மைந்தன் கிருஷ்ணன். அது போல் கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனை வணங்கினால் அவன் ஆஆ என அலறிக் கொண்டு நமக்கு அருள் புரிவான், என சீக்கிரம் படுக்கையை விட்டு எழு தோழியே என எழுப்புகிறார்கள்.
திருவெம்பாவை பாடல் - 8
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?
வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்.
பாடல் பொருள்: அன்புத் தோழியே கோழி கூவிவிட்டது. பறவைகள் இரைத் தேட கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் 7 ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைப்பது உனக்கு கேட்கலையோ? அண்ணாமலையார் கோவிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. பரஞ்ஜோதியான சிவனை எண்ணி நாங்கள் பாடுவது உன் காதில் விழாமல் போனது ஏன் என சொல் தோழியே! இத்தனை கேட்டும் இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளிக் கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியை இந்த உலகம் அறியும்! அப்படிப்பட்ட பெருமைமிகு சிவபெருமானை ஏழைகளின் பங்காளனை பாடி மகிழ எழுந்திரு என தோழிகள் அழைக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications