Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேண்டியதை நிறைவேற்றும் கீழப்பாவூர் நரசிம்மர்.. வைகுண்ட ஏகாதசி விழா.. சப்பரத்தில் உலா வந்த பெருமாள்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் 1100 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. பெருமாள் சப்பரத்தில் உலா வந்து அருள்பாலித்தார்.

தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம். இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது.

Margazhi Utsavam at Keelapavoor narasimha temple Vaikunda Ekadasi Festival

தமிழ்நாட்டில் கீழப்பாவூரில் மட்டுமே சமதளமான பகுதியில் 16 திருக்கரங்களுடன் அருள்பாலித்து வருகிறார் நரசிம்மர். சுற்றிலும் வயல்கள், குளங்கள் நிறைந்து பசுமையாக உள்ளது. முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர் ஆகும். ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தது மட்டுமின்றி, நிரந்தரமாகத் தங்கி இருப்பதும் இங்கு மட்டுமே. இத்தலம் சுமார் 1,100 ஆண்டுகள் புராதனச் சிறப்புமிக்கதாகும்.

கிருதயுகத்தில் பிரகலாதனுக்காக திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யனை அழித்தார். சில நாழிகைகளே நீடித்திருந்த நரசிம்ம அவதாரத்தை காண காசியப முனிவர், நாரதர், வருணன், சுகோசன் முனிவர் போன்றோர் விருப்பம் கொண்டு மகா விஷ்ணுவை நோக்கித் தவம் இருந்தனர்.

இவர்களுடைய தவத்தை மெச்சிய பகவான் விஷ்ணு, "பொதிகை மலைச்சாரலில் அகத்தியர் ஏற்படுத்திய மணிமுக்தா தீர்த்தத்தில் நீராடியபின் அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் எம்மை வேண்டித் தவம் இயற்றுக" என்று கூறி மறைந்தார். அதன்படியே முனிவர்களும், தேவர்களும் சித்ரா நதிக்கரையில் பல ஆண்டுகள் கடும் தவம் மேற்கொண்டனர்.

அந்த தவத்தில் மகிழ்ந்த பகவான் மகாவிஷ்ணு தான் முன்பு எடுத்த நரசிம்ம அவதாரத்தை ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகா உக்ர மூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் காட்சியளித்தார். கர்ஜனையுடன் காட்சியளித்த பகவானைக் கண்ட முனிவர்களும், தேவர்களும் மெய்மறந்து நரசிம்மரை தரிசித்தனர். பின்னர், இந்த அவதாரக் கோலத்திலேயே இவ்விடத்தில் நிரந்தரமாகக் குடிகொண்டார். அந்த இடம் சோழர்கள் காலத்தில் சத்திரிய சிகாமணி என்று அழைக்கப்பட்ட தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.

இரண்ய கசிபுவை சிங்கப்பெருமாள் வதம் செய்த காட்சியை இத்தலத்தில் அப்படியே காணலாம். இரண்யனை தன் மடி மீது கிடத்தி, இரண்டு கரங்களால் அவனைப் பிடித்து, நான்கு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்து, இரண்டு கரங்களால் குடலை உருவி மாலையாகப் பிடித்து, மீதமுள்ள எட்டு கரங்களில் ஆயுதங்களுடன் உக்கிரமாகக் காட்சி தருகிறார்.

கருவறையில் உள்ள நரசிம்மர் மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீர்ப்பற்றி எரிந்தது. இவரின் உக்கிரத்தை தணிக்கும் பொருட்டு பிரம்ம தேவன் லட்சுமியை அனுப்பி வைத்தார். இதனால் நரசிம்மரின் சீற்றம் தணிந்தது. இதனைக் குறிக்கும் வகையில் நரசிம்மரின் மார்பில் லட்சுமி பிரதிஷ்டையாகக் காணப்படுகிறார்.

சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்த கோவிலில் மாலை வேளைகளில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்குமாம். இதனால் பக்தர்கள் அங்கு சென்று வழிபட பயந்தனர். பிற்காலத்தில் நரசிம்மருக்கு இளநீர், பால் அபிஷேகம் செய்ய ஆரம்பித்த பிறகு சாந்தசொரூபியாக மாறி விட்டார் என்றும் கூறுகின்றனர்.

மகா உக்ரமூர்த்தியாக இருக்கும் நரசிம்ம பெருமாளைத் தணிக்கும் பொருட்டு சன்னதி முன்பாக ஒரு தெப்பக்குளம் வெட்டப்பட்டுள்ளது. இது நரசிம்மர் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவபெருமானே சரபப் பறவையாக அவதாரம் எடுத்து நரசிம்மரின் சீற்றத்தை தணித்தார் என்கிறது தல புராணம்.

நரசிம்ம ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை, சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருமணத்தடை, கடன் தொல்லை, நீண்டநாள் நோய், நீதிமன்ற வழக்கு
போன்றவற்றிற்கு பரிகாரம் செய்து வழிபடும் தலமாக இத்தலம் விளங்குகிறது. பானகம் நைவேத்தியம் செய்வது சிறப்பு.
ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி 16 சுற்றுகள் பிரதட்சிணமாக வந்தால் பிரார்த்தனைகள் உடனே நிறைவேறுகிறது.

இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று காலையில் கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஜனவரி 2ஆம் தேதி வரைக்கும் நடைபெறும் விழாவை முன்னிட்டு பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி தெப்பத்தை வலம் வருவார். சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

Margazhi Utsavam at Keelapavoor narasimha temple Vaikunda Ekadasi Festival

வைகுண்ட ஏகாதசி தினமான டிசம்பர் 23ஆம் தேதியன்று அதிகாலை 5.45 மணிக்கு ஸ்ரீராம நாம பஜனை நடைபெறும். காலை 10.30 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனமும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றப்படும்.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு வரும் 17ஆம் தேதி முதல் ஜனவரி 14ஆம் தேதி வரைக்கும் தினசரியும் பஜனைகள் நடைபெறும். காலை 6 மணிக்கு பஜனையுடன் தெப்பக்குளம் வலம் வருதலும் நடைபெறும்.

தென்காசி - திருநெல்வேலி சாலையில், தென்காசியில் இருந்து கிழக்கில் 10 கிலோ மீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோ மீட்டர் தொலைவில் கீழப்பாவூர் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+