இன்று மாசி மகம்.. புண்ணிய நதிகளில் நீராடுவது ஏன்? விரதம் இருப்பது எப்படி?
சென்னை: மாசி மகம் நாளான இன்று எந்த நேரத்தில், எந்த முறையில் விரதம் இருந்து, வழிபாடு நடத்தினால் நம்முடைய பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணிய பலன்களை பெற முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இன்று புண்ணிய நதிகளில் நீராடுவதால் என்ன சிறப்பு என்றும் அறிந்து கொள்ளலாம்.
மாசி மாதத்தில் வரும் மக நட்சத்திரத்துடன் கூடிய பெளர்ணமி நாளே மாசிமகம். மாசி மகம் என்றாலே இந்துக்களின் மிகவும் முக்கியமான வழிபாட்டு நாள் ஆகும். பராசக்தி தாட்சாயணியாக அவதரித்ததும், பிரம்மஹத்தியிடம் பிடிபட்ட வருண பகவானுக்கு சிவபெருமான் சாபவிமோசனம் அளித்ததும் இதே மாசிமகம் நாளில் தான். இந்த ஆண்டிற்கான மாசி மகம் இன்று (மார்ச் 12ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

மாசி மகம்
மகம் நட்சத்திரம் இன்று அதிகாலை 3.53 மணிக்கு பிறந்துள்ளது. அதிகாலை தொடங்கியுள்ள இந்த மகம் நட்சத்திரம் அடுத்த நாளான நாளை மார்ச் 13 ஆம் தேதி காலை 5.09 மணி வரை வருகிறது. ஆனால், பெளர்ணமி அடுத்த நாளான மார்ச் 13 ஆம் தேதியே பிறக்கிறது. இருப்பினும், இன்றே மாசி மக வழிபாடு செய்ய வேண்டும்.
சில குறிப்பிட்ட நாட்களில் புனித நீராடுவது மிக அதிகமான பலன்களை தரும். அப்படி ஒரு அதிகமான புண்ணிய பலன்களை தரக் கூடிய நாள் தான் மாசி மகம். இந்த நாளில் புனித நீராடினால், புண்ணிய நதிகளில் நீராடிய பலன்களையும், பாவங்களில் இருந்து விடுபட்டு, புண்ணிய பலன்களை பெறுவதற்கான பலன்களையும் பெற முடியும் என்பது நம்பிக்கை.
மாசிமகம் நாளில் நீராடுவது ஏன்?
புண்ணிய நதிகளாக கங்கை, யமுனை, பிரம்மபுரத்திரா, கோதாவரி, நர்மதை, காவிரி உள்ளன. இந்த நதிகளில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களின் பாவத்தை சுமக்கும் இந்த நதிகள் தங்கள் பாவத்தை போக்கிக் கொள்வது எப்படி? என்று சிவபெருமானிடம் வேண்டினர்.
அதற்கு சிவபெருமான் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடும்படி கூறியுள்ளார். சிவபெருமான் புண்ணிய நதிகளை நீராட சொன்ன நாளே மாசி மகம். இதன் காரணமாகவே, கும்பகோணத்தில் உள்ள மாசிமக குளத்தில் இந்த மாசிமக நன்னாளில் நீராடினால் பாவங்கள் நீங்கி ஏராளமான பலன்களும், நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், இன்று கும்பகோணம் மாசிமக குளத்தில் நீராட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். கும்பகோணம் மாசிமக குளத்தில் நீராட இயலாத பக்தர்கள் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடலாம்.
விரதம் இருப்பது எப்படி?
மாசிமக நன்னாளானது சிவபெருமான், முருகன், விநாயகர், விஷ்ணு என அனைத்து தெய்வங்களுக்கும் உற்ற நாள் இந்த நாளில் விரதம் இருப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும். குழந்தைப் பேறு வேண்டும் தம்பதிகள் முருகப்பெருமானை வேண்டி நாள் முழுவதும் விரதம் இருக்கலாம். மேலும், திருமண வாழ்க்கையில் பிரச்சனை உள்ளவர்கள் அம்பாளை வேண்டிக்கொள்ளலாம், அம்பிகைக்கு நடக்கும் குங்கும அர்ச்சனையில் பிரசாதமாக வழங்கப்படும் குங்குமத்தை தினமும் நெற்றியில் அணிந்து வரலாம்.
மாசி மக நன்னாளில் அனைத்திற்கும் மூலதாரமாக திகழும் சிவனை முழு மனதாக நினைத்து வணங்க வேண்டும். மேலும், குலதெய்வத்தை வேண்டி பொங்கல் வைத்தும் வழிபடலாம். பெருமாளுக்கு இந்த மாசிமக நன்னாளில் சத்யநாராயண பூஜை செய்வதும் நன்மை பெருக்கும். முன்னோர்களுக்கு இந்த மாசி மக நன்னாளில் தர்ப்பணம் கொடுப்பதும் சிறப்பு. இதுவரை முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க தவறி இருந்தாலும், அதனால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
வீட்டிலேயே வழிபடலாம்
இன்று நீர்நிலைகளுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது சிறப்பானது. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள், வீட்டில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். வீட்டில் கங்கை நீர் அல்லது ஏதாவது தீர்த்தம் இருந்தாலும் கலந்து வைக்கலாம். அதோடு சிறிதளவு மஞ்சள்தூள், திரவியப்படி பொடி சேர்த்து, வீட்டின் பூஜை அறையில் வைத்து, கங்கை உள்ளிட்ட புண்ணிய நதிகளின் பெயர்களை சொல்லி, வேண்டிக் கொண்டு, குளிக்கும் தண்ணீரில் அந்த தீர்த்தத்தில் சிறிது கலந்து குளிக்கலாம். தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து விடலாம்.












Click it and Unblock the Notifications