எல்லா கடவுளும் ஒண்ணுதான்.. கடலூர் மாரியம்மனை தரிசித்த இஸ்லாமிய பெண்கள்.. மண்டியிட்டு வழிபாடு
கடலூர்: எல்லா மதமும் என்மதமே எதுவும் எனக்கு சம்மதமே.. என்று நாட்டின் மத ஒற்றுமையை உணர்த்தும் பாடல் உள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில் கடலூரில் உள்ள 5 கிணற்று மாரியம்மன் கோயிலுக்குள் சென்று இஸ்லாமிய பெண்கள் சாமி தரிசனம் செய்த சம்பவம்
மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுப்பட்டு வருகிறது.

கடலூர் முதுநகரில் பிரசித்தி பெற்ற ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் செடல் உற்சவம் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான் திருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
தொடா்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட கரகத்தை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு செடல் போடப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் உடலில் செடல் போட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். இதில் கடலூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரத உற்சவம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
கடந்த 4ஆம் தேதி செடல் உற்சவம், 6ஆம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. மாலையில் வன்னியர் குலசத்திரியர்கள் பொது உற்சவமான, தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளினார். பின்னர் தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதனிடையே ஐந்து கிணற்று மாரியம்மன் கோயிலுக்குள் சென்று இஸ்லாமிய பெண்கள் வழிபட்ட வீடியோ வெளியாகியுள்ள நிலையில்,அதனை நெட்டிசன்கள் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்த 2 முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்தபடி குழந்தையுடன் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவிலுக்கு வந்து rசாமி தரிசனம் செய்தனர். பக்தியுடன் மண்டியிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவில் நிர்வாகி, கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள் சிலர் இக்கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதுடன் மீண்டும் இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி செல்கிறார்கள் என்றார். மத நல்லிணக்கமாக பார்க்கப்படும் இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications