நாக பஞ்சமி 2024: பாம்புக்கு பால் ஊற்றவே கூடாது? புற்றில் மஞ்சள், குங்குமத்தையும் தூவக் கூடாதா?
சென்னை: நாக பஞ்சமி நாளான இன்று பாம்பு புற்றுக்கு பால் வார்க்கலாமா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நாக பஞ்சமியின் போது எப்படியெல்லாம் வழிபடலாம் என்பதையும் பார்க்கலாம். ஆடி மாதத்தில் நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
நாக பஞ்சமி நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பலர் நாகங்களுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். இந்த நாக பஞ்சமியையொட்டி பாம்பு புற்றுக்கு பால் வார்க்கலாமா என்பது குறித்து பலருக்கு சந்தேகங்கள் உள்ளன. பாம்புகளை பொருத்தமட்டில் முட்டையையும் பாலையும் குடிப்பதாகவே கருதப்படுகிறது.

அது போல் குயிலின் கூட்டில் பாம்பு வந்து அதன் முட்டைகளை சாப்பிடும் என்றும் சொல்லப்படுகிறது. அது போல் பாம்புகள் மகுடிக்கு ஆடும் என சொல்லப்படுவதிலும் உண்மை இல்லை என்கிறார்கள். ஏனென்றால் பாம்புகளுக்கு காதுகள் இல்லை என்றும், மனிதனின் அசைவுகளை வைத்தே அவை அசையும் போது மகுடிக்கு ஆடுவது போல் தெரிகிறது என்கிறார்கள்.
இந்த நிலையில் பாம்புக்கு புற்றே கட்டத் தெரியாது என்றும் ஈசல் புற்றில் அது வந்து குடி புகுவதாகவும் ஒரு சிலர் சொல்கிறார்கள். இவற்றில் எதை நம்புவது, எதை ஒதுக்குவது என தெரியவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் நாக பஞ்சமி நாளில் பாம்பு புற்றின் மீது மஞ்சள், குங்குமம் போன்ற பொருட்களை போட்டால் அவை பாம்புகளின் மீது பட்டால் அதற்கு உடல்நலம் பாதிக்கப்படும் என பாம்பு ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
அது போல் உயிருள்ள நாகத்திற்கு தப்பி தவறி கூட பால் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அது ஒரு ஊன் உண்ணி, பால் அதன் மரணத்திற்கு காரணமாக அமைந்துவிடும் என்றும் தெரிவிக்கிறார்கள். பாம்புகளை தெய்வமாக வழிபட விரும்பினால், கோயில்களில் இருக்கும் அவற்றின் சிலைகளை வணங்கலாம் என்கிறார்கள். பாம்புகள் என்பதை நமது வாழ்க்கை சங்கிலியில் முக்கியமானது. அவை இல்லை என்றால் சுற்றுச்சூழல் அமைப்பில் பாதிப்பு ஏற்படும்.
நாக பஞ்சமி நாள் அன்று விரதமிருந்து நாகத்தை தெய்வமாக வழிபட்டால் தோஷங்கள் நீங்கி திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதாவது ஜாதகத்தில் நாக தோஷம் இருந்தால் நம்முடைய வீட்டில் எந்த சுப காரியமும் நடைபெறாது. நம்முடைய ஜாதகத்தில் ராகு கேதுவுக்கு இடையே கிரகங்கள் சிக்கியுள்ள போது பிறக்கும் குழந்தைகளுக்கு கால சர்ப்ப தோஷம் ஏற்படும். முன் ஜென்மத்தில் வாழ்ந்த போது பாம்பிற்கோ அல்லது பிற விலங்கினங்களுக்கோ நீங்கள் கேடு விளைவித்திருந்தால் உங்களுக்கோ அல்லது உங்களது சந்ததியினருக்கோ நாக சர்ப்ப தோஷம் ஏற்படும். இந்த தோஷங்களை நிவர்த்தி செய்துக் கொள்ளத்தான் நாகபஞ்சமி வழிபாடு முக்கியமானது.

பிரம்ம தேவரின் மகனான கஷ்யபருக்கு 4 மனைவிகள் இருந்தனர். அவர்களில் ஒருவரான கத்ரி என்பவருக்கும் பிரம்ம தேவருக்கும் பிறந்தவர்தான் நாகர். இவர் தாய் சொல்லை கேட்டு நடக்காததால் தீயில் கருகி இறக்கும் படி கத்ரி சாபம் கொடுக்கிறார். அந்த சாபத்தினால் பாம்புகளின் ராஜா ஜனமேஜயன் நடத்திய யாகத்தில் பல நாகங்கள் விழுந்து இறந்தன.
இதையடுத்து அஸ்தீகர் என்பவர் ஜனமேஜயனின் யாகத்தை தடுத்து நாகர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்தார். அவ்வாறு நாகர்கள் சாப நிவர்த்தி பெற்ற நாள்தான் இந்த நாக பஞ்சமியாகும். நாக பஞ்சமி அன்று சிறிய வெள்ளி அல்லது செம்பில் செய்யப்பட்ட நாக தேவருக்கு வீட்டிலேயே பால் அபிஷேகம் செய்யலாம். அது போல் பூக்களால் அர்ச்சனை செய்யலாம்.












Click it and Unblock the Notifications