சரஸ்வதி பூஜை.. படிப்பு முக்கியம்.. புகழ் பெற்ற சரஸ்வதி ஆலயங்களை தரிசனம் செய்யுங்கள்!
சென்னை: கோடி கோடியாக சொத்துக்கள் வைத்திருந்தாலோ, நகைகள் வைத்திருந்தாலோ பிறரால் திருடப்பட்டு விடும். ஆனால் யாராலும் கொள்ளையடிக்கப்பட முடியாத ஒரு பொருள் கல்வி செல்வம்தான். நம்முடைய சந்ததிகளுக்கு பல தலைமுறைக்கும் குறைவில்லாமல் கல்வி செல்வம் கிடைக்க சரஸ்வதி பூஜை நாளில் தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற அன்னை சரஸ்வதி ஆலயங்களை தரிசனம் செய்யுங்கள்.
கல்வி தெய்வம்: கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை வணங்கும் நாள் நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாள். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சரஸ்வதி ஆலயத்திற்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள். வீடுகளிலும் சரஸ்வதி தேவியின் படத்தை வைத்த வழிபடுங்கள் கல்விச்செல்வம் குறைவில்லாது கிடைக்கும்.

படிப்பு முக்கியம்: கல்வி செல்வம் ஒருவருக்கு கிடைத்தால் போதும் வீரமும், செல்வமும் தானாகவே தேடி வரும். கல்விக்கு அதிபதியான சரஸ்வதியை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் சரஸ்வதி ஆவாஹணம் செய்து வழிபடுகின்றனர். சரஸ்வதி பூஜையை முன்னிட்டு தமிழ்நாட்டிலும் நாடு முழுவதும் உள்ள பிரபல சரஸ்வதி கோவில்களை தரிசனம் செய்வோம்.
64 கலைகள்: கல்வி கடவுளான சரஸ்வதி தேவி தான் ஆயக்கலைகள் அறுபத்து நான்கினிற்கும் தலைவியாகவும், தெய்வமாகவும் திகழ்கிறாள். சரஸ்வதி தேவியின் அருள் பெற்றவர்கள் ஆயகலைகள் அனைத்தினையும் அறிந்திட முடியும் என்பதே உண்மை. அன்னை சரஸ்வதி நாவினில் குடியிருக்கிறார். எனவேதான் நாம் பேசும் ஒவ்வொரு சொற்களையும் நிதானமாக பேச வேண்டும். சரஸ்வதி தேவியை வணங்கிட ஆயகலைகள் அறுபத்து நான்கும் நமக்கு கிடைக்கும். கலைமகளுக்கு நாற்பதுக்கும் அதிகமான பெயர்கள் உள்ளன.
சரஸ்வதியின் பெயர்கள்: கலைமகள், ஞானவாகினி, தூயாள், பிராமி, இசை மடந்தை, காயத்ரி, சாரதா, வெண்டாமரையாள், ஞானக்கொழுந்து, ஆதிகாரணி, சகலகலாவல்லி, வாணி, பனுவலாட்டி, பாமகள், பாமுதல்வி, பாரதி, நாமகள், பூரவாகினி, சாவித்ரி, ஞான அமிலி நாமகள், கலை மங்கை, வாணி, கலை வாணி, பார்கவி, சரஸ்வதி, பாரதி, சாரதா, சகலகலா வல்லி, பிரம்மதேவி, வேத நாயகி, ராஜ மாதங்கி, நீலதாரா, சித்ர தாரா, சியாமளா, ராஜ சியாமளா, வாக்வாதினி, வாகதீஸ்வரி, நயவுரை நாயகி, ஞான ரூபிணி, வித்யா வித்யா தாரணி ஆகியன ஆகும்.
கூத்தனூர் சரஸ்வதி: சரஸ்வதிக்கென திருவாரூர் மாவட்டம் கூத்தனூர் அருகே பூந்தோட்டத்தில் சரஸ்வதி கோவில் உள்ளது. இரண்டாம் ராஜராஜசோழனால் ஒட்டக் கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்ட கோயில். அதனால் கூத்தனூர் என்று பெயர். கவிபாடும் திறன் வேண்டி கலைமகளை பூஜிக்க நினைத்தார் ஒட்டக்கூத்தர். கூத்தனூரில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்து தட்சிணாவாகினியாய் ஓடும் அரிசொல் மாநதியின் நீரால் அபிஷேகம் செய்து நாள்தோறும் அம்பிகையை வழிபட்டு வந்தார். ஒட்டக்கூத்தரின் தொண்டில் மகிழ்ந்த நாமகள் தன் வாய் மணமாம் தாம்பூலத்தை அவருக்கு கொடுத்து வரகவி ஆக்கினாள் என்பர். தனக்கு பேரருள் புரிந்த கூத்தனூர் சரஸ்வதியை ஆற்றுக்கரை சொற்கிழத்தி வாழிய என்று பரணி பாடியுள்ளார் ஒட்டக்கூத்தர்.
விஜயதசமி நாளில் விஷேசம்: கருவறையில் வெண்ணிற ஆடை தரித்து வெண் தாமரையில் பேரெழிலோடு வீற்றிருக்கிறாள் சரஸ்வதி. முதலாக அட்சராப்பியாசம் என்கிற கல்வியைத் தொடங்கும் குழந்தைகள் இங்கு வந்து ஆரம்பிக்கிறார்கள். மாதந்தோறும் கலைமகளுக்கு பவுர்ணமி அன்று மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகளும், மூல நட்சத்திரம் அன்று சிறப்பு அபிஷேகம் உண்டு. சரஸ்வதி பூஜை அன்று அம்பிகையின் பாதங்களில் பக்தர்கள் மலரிட்டு அர்ச்சனை செய்யலாம். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊரில் அன்னை சரஸ்வதி அருள்பாலிக்கிறார்.
வேதாரண்யம்: வேதாரண்யம் வேதங்களே ஈசனை வணங்கிய தலம். இக்கோயிலின் பிராகாரத்தில் மிகப்பெரிய சரஸ்வதி வீற்றிருக்கிறாள். இத்தலத்து நாயகியான உமையம்மையின் குரல் யாழைவிட இனிமையானது என்பதால், தான் வீணையில்லாது அமர்ந்திருக்கிறாள். அதனாலேயே இத்தலத்து அம்பாளின் திருப்பெயர் யாழைப் பழித்த மொழியம்மை என அழைக்கப்படுகிறார்.
வாணியம்பாடி சரஸ்வதி: பிரம்மாவின் சாபத்தால் வாணி பேசும் சக்தியை இழந்தாள். ஆனால், வாணியம்பாடியில் உள்ள அதிதீஸ்வரரையும், பெரியநாயகியையும் பூஜித்து தன்னுடைய இயல்பை பெற்றாள். சிவனும், பார்வதியும் வாணிக்கு அருள் செய்ததோடு அவளைப் பாடும்படியும் கூறினர். அப்படி தெய்வ தம்பதியின் அருளாணையை ஏற்று வாணி அழகாகப் பாடியதால் வாணியம்பாடி என்றானது. ஆலயத்தின் முகப்பிலேயே சிவ- பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சந்நதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள். வேலூர் - கிருஷ்ணகிரி பாதையில் இத்தலம் அமைந்துள்ளது.
சரஸ்வதி பூஜை திங்கட்கிழமை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள சரஸ்வதி கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். வீட்டிலேயே சரஸ்வதி படத்திற்கு முன்பாகவும் குழந்தைகளை எழுத வைக்கலாம். பொது தேர்வு எழுத தயாராகும் மாணவர்கள் சரஸ்வதி படத்திற்கு முன்பாக பேனா, நோட்டுக்களை வைத்து வணங்க கல்வி வளம் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications