ஓணம் பண்டிகை.. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள்.. பக்தர்களுக்கு விருந்து
கேரளா: ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளது. வழக்கமான பூஜைகளை காட்டிலும் இன்று முதல் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளது. ஓணம் பண்டிகை சிறப்பு விருந்தும் பக்தர்களுக்கு வழங்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் கோவில் ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருட பிறப்பு போன்றவற்றிற்கு திறக்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் மலையாள மாத பிறப்பு நாளில் பரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்களும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மாலை 5 மணிக்கு மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி முன்னிலையில் அர்ச்சகர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடையை திறந்து வைத்தார். சபரிமலை சன்னிதானத்தில் தீபத்திருவிழா முடிந்ததும், ஹோம குண்டத்தின் உச்சியில் உள்ள தீபம் ஏற்றப்பட்டது.
இன்று காலை முதல் சிறப்பு பூஜைகளுக்காக பக்தர்கள் பதினெட்டாம் படியேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு நாளைய தினம் 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையின் போது, வழக்கமான பூஜைகள் தவிர, உத்திராடம் முதல் சதயம் நட்சித்திர நாட்கள் வரை சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. உத்திராடம் நாளில் மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி, திருவோணம் மற்றும் அவிட்டம் நாட்களில் தேவஸ்தான ஜீவன்க்காரர்களும் கலந்துகொள்வார்கள். சதயம் நட்சத்திரம் நாளில் ஒரு பக்தர் சடங்கு ஊர்வலத்தை வழிநடத்துவார்.
பாரம்பரிய ஓணம் விருந்தான ஓணசத்யா, உத்திராடம் முதல் சதயம் வரையிலான நாட்களில் பரிமாறப்படுவது வழக்கம். உத்திராடம் நாளில், மேல்சாந்தி கே. ஜெயராமன் நம்பூதிரி தலைமையில், காவல்துறையினர் பங்கேற்பார்கள். சதயம் நாளில் பக்தர் ஒருவரின் தலைமையில் ஓணம் விருந்துடன் தொடர்புடைய சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications