பழனியில் குடமுழுக்கு..விநாயகர்.. இடும்பன்..கடம்பன் கோவில் கோபுரங்களுக்கு நாளை புனிதநீரால் அபிஷேகம்
பழனியில் நாளை பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை, விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் சன்னதிகளில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.
பழனி:
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு யாகசாலைகளில் வேள்வி பூஜைகள் தொடங்கியுள்ளன. நாளைய தினம் பழனி பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை, விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
பழனி முருகன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள தங்க விமானம், தங்க சப்பரம், தங்க மயில், தங்கத் தேர் மற்றும் சுதை சிற்பங்கள், பிரகாரங்களில் உள்ள சுவாமி சன்னதிகள் உள்ளிட்டவை புத்தம் புதியதாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

குடமுழுக்கு வைபவத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 18ம் தேதி துவங்கின. கடந்த 22ம் தேதி மாலை 8 கால வேள்விகளில் முதற்கால யாக வேள்வி துவங்கியது. இதற்காக பாரவேல் மண்டபத்தில் 94 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. தற்போது இரவு பகலாக யாக வேள்விகள், ஓதுவார் பாராயணங்கள் நடந்து வருகின்றன.
முக்கிய நிகழ்ச்சியான யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை துவங்கியது. காலையில் பாத விநாயகர் கோவிலில் பரிவார உப தெய்வகள் திருக்குடங்கள் அலங்கரிக்கப்பட்டு வேள்விச்சாலை புகுதல் நடைபெற்றது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் மூலவர் தண்டாயுதபாணி சுவாமிக்கு அஷ்டபந்தனம் செய்தல் மற்றும் மூலஸ்தானம், அர்த்தமண்டபம் பணிகள் பொருட்டு திரையிடப்பட்டது.
முன்னதாக பாரவேல் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மூலவர் அருட்சக்தியை திருக்குடங்களில் எழுந்தருள செய்து, உட்பிரகாரத்தில் மேளதாளம் முழங்க உலா வர செய்யப்பட்டது. பின்னர் திருக்குடங்கள் கார்த்திகை மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள யாகசாலைக்கு எழுந்தருள செய்யப்பட்டது. தொடர்ந்து தேன், நெய், காய்கள், பழங்கள் 12 விதமான மூலிகைகள் கொண்டு பூர்ணாஹூதி செய்யப்பட்டு வேள்வி நிறைவு செய்யப்பட்டு மஹாதீபாராதனை நடைபெற்றது. வேள்விச்சாலையில் ஓதுவார்கள் பன்னிரு திருமுறை பாடல்கள் பாடினர்.
நாளைய தினம் பாதவிநாயகர், சேத்ரபாலர், கிரிவீதியில் உள்ள 5 மயில் சிலைகள், படிப்பாதை, விநாயகர் சன்னதிகள், இடும்பன், கடம்பன், அகஸ்தியர் என படிப்பாதையில் உள்ள அனைத்து உபசன்னதிகளின் கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளது.
எட்டுக்கால பூஜை நாளை மறுநாள் காலை நிறைவு பெற்றவுடன் குடங்கள் மேளதாளம் முழங்க கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெறவுள்ளது. மலைக்கோயில் ராஜகோபுரம், தங்க கோபுரம் மற்றும் பிரகார தெய்வங்களின் சன்னதிகளுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களில் குலுக்கல் முறையில் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பழனி கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு 27ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications