பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை திடீர் உயர்வு.. பக்தர்கள் ஷாக்.. இலவசமாக தர கோரிக்கை
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் பஞ்சாமிர்தம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. விடுமுறை நாட்களை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் பிரசித்தி பெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தத்தின் விலை உயர்த்தப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். முன்னறிப்பின்றி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி தண்டாயுதபாணி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருவார்கள்.

மலைக்கோயில், தரை மட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 690 படிகள் கடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். மலைக்கோயில் அடிவாரத்தில் பாதவிநாயகர் இருக்கிறார். மலையேறும் முன்பாக இவரை வணங்கிச்செல்ல வேண்டும் என்பது ஐதீகம். இவ்விநாயகருக்கு பின்புறத்தில் முருகனின் பாதம் இருக்கிறது
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். இடும்பனை ஆட்கொண்டார் முருகன்.
மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். மலைமேல் உள்ள தண்டாயுதபாணி மூலவர் நவபாஷனத்தினால் உருவாக்கப்பட்டவர். இதனை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் போகர் என்ற சித்தர். பழனி தண்டாயுதபாணி சிலையை போகர் செய்வதற்கு 9 ஆண்டுகள் ஆனதாம். அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று சேகரித்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி சிலையாக உருவாக்கினர்.
இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாம்.
தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம். அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் பரவி நிற்கும். சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட நவபாஷாண சிலை மீது அபிஷேகம் செய்து எடுக்கப்படும் விபூதி சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாத பொருட்களை உண்ணும் பக்தர்களுக்கு எவ்வித நோயும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பல்வேறு நோய்களை நீக்கும் தன்மை கொண்ட அபிஷேக பஞ்சாமிர்தம் இங்கு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
வாழைப்பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய், கற்கண்டு, பேரிச்சை உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு, பழனி முருகன் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. இதில், சிறிதளவுகூடத் தண்ணீர் சேர்க்கப்படாது. இதனால், பஞ்சாமிர்தம் பாகு நிலையுடன் சுவையானதாக மாறுகிறது. மேலும், கெட்டுப் போகாமல் இருக்க செயற்கையாக எந்த வேதிப்பொருட்களும் இதில் கலக்கப்படுவதில்லை. இது, இந்திய அரசின் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தின் வழிகாட்டுதலின்படி தயாரிக்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த பழனி பஞ்சாமிர்தத்துக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது சிறப்பாகும்.
பழனிக்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தத்தை வாங்கிச் செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் பழனி பஸ்நிலையம், அடிவாரம், மின்இழுவை ரயில் நிலையம், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் என பல்வேறு இடங்களில் விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இங்கு டப்பா, டின் என இரண்டு வகைகளில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. அதாவது 500 கிராம் அளவில் டப்பாக்களில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் விலை ரூ.35க்கும், டின்னில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நேற்று முதல் ரூ.5 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது டப்பா பஞ்சாமிர்தம் ரூ.40க்கும், டின் பஞ்சாமிர்தம் ரூ.45க்கும் விற்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே தயாரான பஞ்சாமிர்த டப்பாக்களில் உள்ள விலையை பேனாவால் மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றைய தினம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். விடுமுறை நாட்களை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் பிரசித்தி பெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தத்தின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினர். முன்னறிப்பின்றி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கூறி அதிருப்தி தெரிவித்தனர்.
பழனி முருகன் கோவிலுக்கு வரும் வருமானத்துக்கு, திருப்பதியை போல் பக்தர் ஒருவருக்கு ஒரு டப்பா பஞ்சாமிர்தத்தை இலவசமாக வழங்கலாம். பக்தர்களுக்கு தேவை இருந்தால், கூடுதல் டப்பாக்களை பணம் கொடுத்து வாங்கி செல்லலாம். ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பஞ்சாமிர்தம் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினர்.












Click it and Unblock the Notifications