உங்க வீட்டு பூஜை அறை எப்படி இருக்கு? கண்டிப்பாக வைக்க வேண்டிய போட்டோக்கள், தவிர்க்க வேண்டியவை என்ன?
சென்னை: நம்முடைய வீட்டையே கோவில் போல சுத்தமாக வைத்திருந்தால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கடவுளின் படங்கள் வைத்திருக்கும் பூஜை அறையை நாம் எந்த அளவிற்கு நன்றாக வைத்திருக்கிறோமோ அந்த அளவிற்கு இறைவனின் அருள் நம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும். நம்முடைய பூஜை அறையில் என்ன சாமி படங்களை வைத்திருக்க வேண்டும் எந்த பூக்களை சாமி படங்களுக்கு போட வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
கடவுள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்றாலும் கோவில் கருவறையில் உள்ள மூலவருக்கு என்று ஒரு சக்தி உள்ளது. அதே போலத்தான் நம்முடைய பூஜை அறையில் உள்ள சாமிக்கும் சக்தி உள்ளது. பூஜை அறையில் விளக்கேற்றி இறைவனை கண்மூடி வணங்கினாலே மனதில் ஒரு நிம்மதி குடியேறும் அதை அனைவருமே உணர்ந்திருப்பார்கள்.
நாம் குடியிருக்கும் வீட்டில் உள்ள பூஜை அறையை வாஸ்து சாஸ்திரப்படி அமைத்தால்தான் வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். தனி வீடாக இருந்தாலும் சரி, அடுக்குமாடிக் குடியிருப்பாக இருந்தாலும் பூஜை அறையில் வைக்கப்படும் சாமி படங்கள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்கும்படி வைப்பது நல்லது.

பூஜை அறையில் வைக்க வேண்டிய படங்கள்
பூஜை அறையில் முழுமுதற்கடவுளான விநாயக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ மகாலட்சுமியுடன் கூடிய பகவான் நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது ராதையுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி, பால திரிபுரசுந்தரி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலட்சுமி ஆகிய அம்பிகை படங்களும், கல்வி ஞானத்துக்கு அதிபதியான சரஸ்வதி மிகமிக முக்கியமாக இருக்க வேண்டும். குலம் காக்கும் குல தெய்வம் படம் அது உக்கிரமாக இருந்தாலும் நிச்சயமாக இருக்க வேண்டும்.

எந்த படங்களை வைக்க கூடாது
எக்கச்சக்கமாக தெய்வப் படங்களையோ, தெய்வத் திருவுருவங்களையோ வைத்து நிரப்புவதைவிடக் கண்ணுக்கு நிறைவாக இருக்கும் குறைந்த எண்ணிக்கையோடு இவற்றை நிறுத்திக் கொள்வது நல்லது. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைப்பது நல்லது. எந்த இஷ்ட தெய்வத்தையும் பூஜை அறையில் வைத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் உக்கிர தெய்வங்களான மகா காளி உள்ளிட்ட தெய்வங்களின் படங்களை வைத்து வழிபட வேண்டும்.

விளக்கேற்றும் நேரம்
பூஜை அறையில் இருக்கும் தீபமானது கிழக்கு, வடக்கு நோக்கி எரியும் வகையில் ஏற்ற வேண்டும். பூஜை அறையில் சூரிய உதயத்தின்போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பூஜை செய்வது நல்லது. அப்படி இல்லாவிட்டால் மாலை நேரத்தில் விளக்கேற்றி வழிபடலாம். பூஜை அறையில் தெய்வங்களுக்கு சிறிய அளவில் நைவேத்தியம் படைக்க வேண்டும்.

வலம்புரி சங்கு
பூஜை அறையில் வலம்புரி சங்கு, சாளகிராமம் வைத்து வழிபடலாம். அது நம்முடைய வீட்டில் சக்தியை அதிகரிக்கும்.
பூஜையின்போது தீபாராதனை காட்டி, தெரிந்த தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடவேண்டும். மந்திரங்கள் உச்சரிப்பது சக்தியை அதிகரிக்கும். ஒவ்வொரு நாள் பூஜையின்போதும் சிறிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூஜை செய்ய வேண்டும். அடுத்த நாள் அதைக் கூரையில் ஊற்றிவிட வேண்டும். இப்படிச் செய்வதால் துர்சக்திகள் நம் வீட்டை அண்டாது.

மணியோசை அவசியம்
வீட்டில் பூஜை செய்யும்போது வாசனைச் சாம்பிராணிகள், ஊதுவத்திகள் ஆகியவற்றை ஏற்றி வைத்த பிறகு பூஜையைத் தொடங்குவது நல்லது. பூஜையின்போது மணியோசை எழுப்புவதும்கூட துர்சக்திகள் நெருங்காமல் இருப்பதற்குத்தான். மணியின் இனிய ஓசையானது தீய சக்திகளை விரட்டி, தெய்வீக சக்தியை வீட்டில் நிலவச் செய்யும் வல்லமை கொண்டது. தினமும் மணியோசை எழுப்பி பூஜை செய்பவர்களின் வீடுகளில் தெய்வ கடாட்சம் நிரம்பி, ஆரோக்கியமும் சகல சௌபாக்கியங்களும் பெருகும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பபட்டுள்ளது.

பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்கள்
சிலரது வீடுகளில் படுக்கையறையிலும், சமையலறையிலும் பூஜை அறை இருக்கும். பூஜை நடைபெறாத நேரங்களில் அந்த அறையைத் திரையிட்டு மறைத்துவிட வேண்டும். பூஜைக்குப் பயன்படுத்தும் பொருள்களைப் பூஜை அறையிலேயே வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் வேறு இடங்களில் வைக்கக் கூடாது. பூஜை அறையில் தேவையற்ற பொருட்களை வைக்கக் கூடாது.

எள் தீபம் ஏற்றக்கூடாது
சனி பகவானுக்கு வீட்டில் எள் விளக்கு ஏற்றக் கூடாது. அதே போல எலுமிச்சை தீபமும் பூஜை அறையில் ஏற்றக்கூடாது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் இரும்புப் பொருட்களை பூஜைக்குப் பயன்படுத்தக்கூடாது. இரும்பு யமனுக்கு உரியது. வெள்ளி, தாமிரம், ஈயம் பூசிய பித்தளை, மண்ணால் ஆன பூஜைப் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

சுத்தம் அவசியம்
செவ்வாய், வெள்ளி கிழமைக்கு முதல்நாள் பூறை அறையை துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் சுத்தம் செய்வது சிறப்பானது. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களை வைக்கக் கூடாது. மல்லிகை, முல்லை, ரோஜா, மரிக்கொழுந்து போன்ற வாசனையான பூக்களை வைத்து வணங்க நம்முடைய வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.












Click it and Unblock the Notifications