ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. அயோத்தியில் கோலாகலமாக தொடங்கிய பூஜைகள்.. ஒளிரும் இராம ஜோதிகள்
அயோத்தி: ராமஜென்ம பூமியில் கும்பாபிஷேக பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. 22ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நாளன்று நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த கோவில் திருப்பணிகள் நிறைவடைந்து, வரும் 22ம் தேதி அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கப்பட உள்ளார்.

அயோத்தி இராமஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாயில் மிகவும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில், வரும் 22ம் தேதி ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. விழாவிற்கான விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.
கோவில் கருவறையில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான சடங்கு பூஜைகள் இன்று தொடங்கின. 11 பூசாரிகள் இந்த சடங்குகளை செய்கிறார்கள். இந்த சடங்குகள் 21ம் தேதி வரை நடைபெறும். 17ஆம் தேதியன்று ராமர் சிலையின் பரிசார் பிரவேசம் விழா நடைபெறுகிறது. அதன்பின்னர் 18ஆம் தேதி தீர்த்த பூஜை, ஜல யாத்திரை, கந்தாதிவாஸ் ஆகிய பூஜைகள் நடைபெறுகின்றன.
வரும் 19ஆம் தேதி அவுஷதி திவாஸ், கேசரதிவாஸ், கிரிதாதிவாஸ் மற்றும் தன்யாதிவாஸ் ஆகிய சடங்குகள் நடைபெறுகின்றன.
20ஆம் தேதி, சர்க்கரா திவாஸ், பலாதிவாஸ் மற்றும் புஷ்பதிவாஸ் போன்ற சடங்குகள் நடைபெறும். 21ஆம் தேதி மத்யதிவாஸ் மற்றும் ஷையாதிவாஸ் சடங்குகள் நடைபெறும். ஜனவரி 22ஆம் தேதி, இறுதிக்கட்ட பூஜைகள் செய்யப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு சிலை பிரதிஷ்டை செய்யப்படும்
ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நாதஸ்வரம், மேளதாளம், மங்கள வாத்தியம் முழங்க அயோத்தி ஶ்ரீராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
ஜனவரி 22ஆம் தேதியன்று நாட்டு மக்கள் அனைவர் இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள பாஜக நிர்வாகிகள், அவரவர் பகுதிகளில் இருக்கும் கோவில்களை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். திறப்பு விழா தினத்தன்று மாலை வேளையில் ஒவ்வொருவர் வீட்டிலும் 5 தீபங்களை ஏற்ற வேண்டும்.
இவை இராம ஜோதிகள் என்று அழைக்கப்படும். இவற்றை பக்தர்களும், பாஜகவினரும் குடும்பத்துடன் வணங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனிடையே அயோத்தியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட கலசங்கள், நாட்டில் உள்ள முக்கிய இராமர் கோவில்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. அதன்படி, ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்ட சூரியனார் கோவிலுக்கு சமீபத்தில் கலசம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, இக்கலசத்திற்கு சூரியனார் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அங்குள்ள ஸ்ரீராமர் சன்னிதியின் மீது, உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் முன்னிலையில், உள்ளூர் மக்களால் அக்கலசம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர், கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஜம்மு காஷ்மீரில் அமைந்திருக்கும் மார்த்தாண்ட சூரியனார் கோவில், 8ஆம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இந்த பழங்கால கோவிலில் மூலவர் சூரிய பகவான் சன்னிதியுடன், ஸ்ரீராமர் சன்னிதியும் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications