ஆடி பிறப்பு.. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு.. பம்பையில் தர்ப்பணம் தர ஏற்பாடு
சபரிமலை: ஆடி மாத பிறப்பு பூஜைக்காக கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில் பம்பையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவில் குளங்கள், ஆறுகள், கடற்கரை பகுதிகளில் இந்துக்கள் முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு ஆடி அமாவாசை வருகிற 17ஆம் தேதியும் ஆகஸ்ட் 16ஆம் தேதியும் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கேரளாவில் அனைத்து கோவில்கள், நீர் நிலைகளில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் செய்தியாளர்களிடம் பேசினார்.

திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிறிதும், பெரிதுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. குறிப்பாக ஏராளமான மக்கள் பலி தர்ப்பணம் நடத்தும் சபரிமலை பம்பை ஆறு, திருவல்லம் பரசுராமர் கோவில், சங்குமுகம் கடற்கரை, வர்க்கலை கடற்கரை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்புடன் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆடி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. 17-ந் தேதி முதல் 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி அமாவாசையான 17ஆம் தேதி அதிகமான பக்தர்கள் வர வாய்ப்பு இருப்பதால் பம்பை ஆற்றில் பலி தர்ப்பணம் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக கூடுதல் பூசாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அதிகாலை 2.30 மணி முதல் பலி தர்ப்பணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 16ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். வழக்கம் போல் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, நிலக்கல்லிலும் உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.
ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும். இதனையடுத்து ஆவணி மாத பிறப்பு பூஜைக்காக ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டு 21ஆம் தேதி வரையிலும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பூஜை நடைபெறும். திருவோணம் திருவிழாவிற்காக ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரையிலும் கோவில் நடை திறந்திருந்திருக்கும். ஆகஸ்ட் 29ஆம் தேதியன்று திருவோணம் பண்டிகை கேரளாவில் கொண்டாடப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications