சபரிமலையில் குவியும் கூட்டம்.. ஐயப்பனுக்கு நோ ரெஸ்ட்.. நெரிசலுக்கு காரணம் என்ன? போலீஸ் விளக்கம்
சபரிமலை: கார்த்திகை மாதம் நாளைய தினம் முடிவடைய உள்ள நிலையில் சபரிமலைக்கு அலைகடலென பக்தர்கள் திரண்டு வருகின்றனர். ஒரு நிமிடத்திற்கு 450 பக்தர்கள் பதினெட்டு படியேறி ஐயப்பனை தரிசனம் செய்வதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது அன்றிலிருந்து பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மழையால் சில நாட்கள் பக்தர்கள் வருகை தடைபட்டது.

இந்த நிலையில் டிசம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது. கடந்த சில நாள்களாக பக்தர்கள் நிலக்கல்லுக்கு செல்ல முடியாத அளவுக்கு வாகன நெரிசலும், பம்பையில் இருந்து சந்நிதானம் செல்ல சுமார் 18 மணி நேரம் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டது.
குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். கூட்ட நெரிசல் காரணமாக சபரிமலையில் தரிசனம் செய்யாமல் பல பக்தர்கள் வீடு திரும்பினர். இருமுடியோடு சென்ற பக்தர்கள் பந்தளம் ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் இருமுடியை சமர்ப்பித்துள்ளனர்.
கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து தேவசம்போர்டு சார்பில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டாலும் சபரிமலை பதினெட்டாம் படி மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மேற்கூரை அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள கல் தூண்களால்தான் அதிக அளவு பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பதினெட்டாம் படியை ஒட்டி இப்போது கல் தூண் அமைக்கப்பட்டுள்ள இடத்தில்தான் போலீஸார் நின்றுகொண்டு பக்தர்களை பதினெட்டாம் படியில் ஏற்றிவிடுவது வழக்கம். ஆனால், மேற்கூரை பணிக்காக கல் துண்கள் அமைக்கப்பட்டதால் பக்தர்களை ஏற்றிவிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைப்போன்று நிமிடத்துக்கு 750 பக்தர்களை ஏற்றிவிட முடியாத நிலை உள்ளதாகவும் நிமிடத்துக்கு சுமார் 450 பக்தர்களையே பதினெட்டாம் படியில் ஏற்றிவிட முடிவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது. மொத்தத்தில் சபரிமலையில் நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு காரணம் பதினெட்டாம் படிக்கு முன்பு உள்ள கல் தூண்கள்தான் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் பதினெட்டாம் படியேற வேண்டும். பதினெட்டாம் படியை பாதுகாக்கும் விதமாகவும் ஹைட்ராலிக் மேற்கூரை அமைக்க தேவசம்போர்டு கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதற்கு ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் நன்கொடை வழங்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் பங்களிப்புடன் மேற்கூரை அமைக்க கல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கூரை பணிகள் இன்னும் முழுமை அடையாமல் உள்ளன. இதற்கிடையே பதினெட்டாம் படியின் அழகையும், புனிதத்தையும் கெடுப்பதாக கூறி கல் தூண்கள் அமைத்ததற்கு எதிராக கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் கல் தூண்களால் சபரிமலையில் பக்தர்கள் நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறை அதிகாரிகளும் அரசிடம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications