சித்திரை விஷு பண்டிகை..சபரிமலை கோவில் நடை திறப்பு..15ல் கனி காண குவியும் ஐயப்ப பக்தர்கள்
சென்னை: சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. மலையாள புத்தாண்டான விஷு பண்டிகை 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வரும் 19ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் கொண்டாடப்படும். தை மாதம் மகர விளக்கு பூஜை கொண்டாடப்படும். நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாதந்தோறும் மலையாள மாத பிறப்பு நாளில் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மலையாள புத்தாண்டு தினமான சித்திரை விஷு பண்டிகையையொட்டி செவ்வாய்கிழமை மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜை செய்தார்.
இதைத்தொடர்ந்து 18ஆம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டு நேற்று முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். தினசரியும் அதிகாலை 4.30 மணிக்கு பள்ளியுணர்த்தல், 5 மணிக்கு நடைதிறப்பு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், 5.30 மணி முதல் 9 மணி வரை நெய் அபிஷேகம், அஷ்டாபிஷேகம், உச்ச பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 6.30 மணிக்கு தீப ஆராதனை, இரவு 7 மணிக்கு புஷ்பா அபிஷேகம், அதைத்தொடர்ந்து படி பூஜை ஆகியவை நடைபெறும். இதையடுத்து இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

15ஆம் தேதி சித்திரை விஷு பண்டிகையன்று வழக்கம்போல் அதிகாலை நடை திறக்கப்பட்டு ஐயப்ப சாமி முன் விஷுக்கனி தரிசனத்துக்கு வைக்கப்படும். காலை 7.30 மணி வரை பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். வரும் 19ஆம் தேதி வரை சித்திரை மாத பூஜைக்காக நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை போன்ற பூஜைகள் நடைபெறும். அன்றைய நாள் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஐயப்ப கோயில் சென்று வருவதற்காக சிறப்பு பேருந்துகளும் வரும் 19ஆம் தேதி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.











Click it and Unblock the Notifications