சனி பெயர்ச்சிக்கு தயாராகும் திருநள்ளாறு.. டிச.20ல் ஸ்கூல், மதுபான கடைகளுக்கு விடுமுறை
திருநள்ளாறு: சனி பெயர்ச்சி விழாவையொட்டி வரும் 20ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபான கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில் புகழ்பெற்ற சனீஸ்வர பகவான் ஆலயம் அமைந்துள்ளது. சனீஸ்வர பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்தாலும் திருநள்ளாறு கோவிலில் வரும் 20ஆம் தேதிதான் சனி பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

வாக்கிய பஞ்சாங்கப்படி சனீஸ்வர பகவான் வரும் டிசம்பர் 20ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனையொட்டி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் திருநள்ளாறு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநள்ளாறு வரும் பக்தர்களுக்காக பல்வேறு ஏற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தை சமாளிக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பல்வேறு சாலைகளில் போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவுள்ளன.
டிசம்பர் 20ஆம் தேதியன்று பள்ளி, கல்லூரி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 20ஆம் தேதி புதன்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவித்துள்ளார். அதே நேரத்தில், அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதே போல வரும் 20ம் தேதி காரைக்கால் மாவட்டம் முழுவதும் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications