அறிவோம் ஐயப்பன் யாத்திரை 2: மனைவி கருவுற்றிருந்தால் மாலை போடலாமா? எப்போது மாலை கழற்றலாம்? 15 விஷயம்
டெல்லி: கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பனை ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 18 படிகள் வழியேறி தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் மகர விளக்கு மற்றும் மண்டல பூஜை காலங்களில் சபரிமலை யாத்திரை செல்கின்றனர்.
சபரிமலை யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிதல் தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய 15 முக்கியமான அம்சங்கள்:

1) பொதுவாக பிரதான மாலை, துணை மாலை அவசியம் என சொல்லப்படுவது உண்டு. ஆனால் உறுதியான கம்பியில் கட்டிய ஒரு மாலை கூட போதுமானது என்கின்றனர் குருசாமிகள்.
2) பக்தர்கள் அணியும் மாலைகளில் ஐயப்பன் படம் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என பலரும் அறிவுறுத்தினர். அப்படியான நிபந்தனை எதுவும் சம்பிரதாயப்படி இல்லை.
3) இரட்டைப் படை தேதியில்தான் மாலை அணிய வேண்டும் என்கிற கருத்தும் சொல்லப்படும். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. ஒற்றைப்படை தேதியிலும் மாலை அணியலாம்.
4) மாலையை சிலர் தங்கம், வெள்ளியில் அணிகின்றனர். ஆனால் சபரிமலை ஐயன் விரும்புவது எளிமை,தூய்மைதான்
5) பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்குதான் சென்று மாலை அணிவிக்க வேண்டும் என்பது இல்லை. எந்த கோவிலிலும் மாலை அணியலாம். வீட்டிலேயே அம்மாவின் கைகளால் மாலை அணிந்து கொள்வதிலும் தவறும் இல்லை.
6) 41 நாட்கள் விரதம் இருந்துவிட்டு சபரிமலைக்கு புறப்படும் நாளில் மாலை அணிவிப்பவரும் உண்டு. ஆனால் முறையாக விரதம் இருந்ததாக மனதால் நம்புகிறவர்கள் அப்படிச் செய்யலாம் தவறில்லை.
7) ஒவ்வொரு முறையும் புதியதாக மட்டுமே மாலை வாங்கி அணிய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. கடந்த முறை யாத்திரைக்கு பயன்படுத்திய மாலையை மீண்டும் பயன்படுத்தலாம்.
8) சபரிமலை ஐயப்பனுக்கான மாலையை ஆரத்தியில் காட்டும் போது அது ஐயப்பனை நெருப்பில் காட்டுவதாகவே அர்த்தமாகிவிடும். அப்படி செய்யாமல் இருக்க வேண்டும் என்பதும் அறிவுரை
9) சபரிமலை யாத்திரைக்கு என மாலையை அணிந்துவிட்ட நிலையில் ஏதோ ஒரு காரணத்தில் மாலையை கழற்றிவிட நேரிடலாம்; ஆனால் சில நாட்கள், சில மாதங்கள் கழித்து மீண்டும் மாலை அணிவதை தவிர்த்து அடுத்த ஆண்டு அணிந்து கொள்வதே சிறந்ததாகும்
10) மாலையை கழற்றுவதற்கு என சில நடைமுறைகள் உண்டு. சபரிமலை யாத்திரை முடிந்து திரும்பும் வழியிலேயே கழற்றக் கூடாது; வீட்டுக்கு வந்து மாலையை கழற்றுவதுதான் சரியாகும். கோவிலில்தான் கழற்ற வேண்டும் என்பது இல்லை; பெற்ற தாயை வைத்தும் மாலையை கழற்றிக் கொள்ளலாம்.
11) மாலை அணிந்த பக்தர்கள் மறைந்த தந்தைக்கு தர்ப்பணம் செய்வதிலும் தவறில்லை. பம்பையில் தாய் தந்தைக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்வுகள் நடைபெறுவதை கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
12) பொதுவாக உறவினர்கள் இறந்துவிட்டால் மாலை அணியக் கூடாது என்பது நடைமுறை. ஆனால் தந்தை வழியில் உறவுகள் இறந்துவிட்டால்தான் தீட்டாக கருதப்படுகிறது. தாய்வழி உறவுகள் இறக்க நேர்ந்தால் தீட்டு இல்லை; மாலை அணியலாம் என்பது ஐதீகம்
13) தந்தை வழி தீட்டு என்பது கூட 3 மாதங்கள்தான். 4வது மாதமாகிவிட்டால் மாலை அணியத் தடையில்லை என்பது குருமார்கள் கடைபிடித்த நடைமுறை. இருந்த போதும் பெற்றோர், சகோதர சகோதரிகள் மகன் மகள் மரணித்திருந்தால் ஓராண்டுக்கு மாலை அணிவிக்க கூடாது என்பதும் சம்பிரதாயம்.
14) மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போது எப்படி மாலை அணிவது என தயங்க வேண்டாம். மனைவி கர்ப்பணியாக இருத்தல் சுப நிகழ்வுதான். அதனால் மாலை அணிவிக்க தயக்கம் தேவை இல்லை.
15) அதேபோல குழந்தை பிறந்துவிட்டதாலேயே மாலையை உடனே கழற்ற வேண்டியதும் இல்லை. அதுவும் சுப காரியம். அதேநேரத்தில் குழந்தை பிறந்து 16 நாட்கள் கழித்து சிசுவை பார்க்கலாம் என்பதும் ஐதீகம்.












Click it and Unblock the Notifications