ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி..புரட்சித்துறவி..மண்ணுலகில் அவதரித்த மகான் செய்த மகத்தான தியாகம் தெரியுமா
சென்னை: தான் ஒருவன் நரகம் சென்றாலும் பரவாயில்லை..பலகோடி மக்கள் சொர்க்கம் செல்ல வேண்டும் என்று "ஓம் நமோ நாராயணா" என்ற எட்டெழுத்து மந்திரத்தை திருக்கோஷ்டியூர் கோபுரத்தின் மீதேறி உரக்கச்சொன்ன மகான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த தினம் இன்று. புரட்சித்துறவி என்று போற்றப்படும் ஸ்ரீராமானுஜர் செய்த தியாகம் அளவிடமுடியாதது. ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி நாளில் அவரைப்பற்றி ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் அறிந்து கொள்வோம்.
வைணவ சமயத்தை தோற்றுவித்தவரும்,சாதி,மதங்களைக் கடந்து மனிதனை மனிதன் நேசிக்க வேண்டும் என் உயரிய கருத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்திய மகான் ஸ்ரீ ராமானுஜர். ஸ்ரீ ராமானுஜர் கிபி 1017ஆம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அப்போது பூதபுரி என்று அழைக்கப்பட்ட தற்போதைய ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார்.

ஸ்ரீ ராமானுஜர் மனித பிறவியா? தெய்வ பிறவியா என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம். பெருமாள் ஆலயங்களில் ராமானுஜருக்கு தனி சன்னதிகள் உள்ளன. யார் அவர் என்று பலரும் கேட்கலாம். திருப்பாற்கடலில் ஸ்ரீமந்நாராயணனின் படுக்கையாக உள்ள ஆதிசேஷன், ராமாவதாரத்தில் ராமர் தம்பி லஷ்மணனாகவும், கிருஷ்ணாவதாரத்தில் கிருஷ்ணருக்கு அண்ணன் பலராமராகவும் தோன்றினார் என்கின்றன புராணங்கள். அந்த ஆதிசேஷனே கலியுகத்தில் ஸ்ரீராமானுஜராக ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார் என்பது நம்பிக்கை.
ஸ்ரீ இராமனுஜர் அவதரித்த தலம் தான் தொண்டை மண்டலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரும்புதூர். இங்கே மூலவராக ராமானுஜர் வீற்றிருக்கிறார். ஸ்ரீபெரும்புதூர் என்று அழைக்கப்படும் இத்தலம் முன்னொரு காலத்தில் பூதபுரி என்ற பெயரில் இருந்தது. இதற்கு காரணம் ஒரு நாள் சிவபெருமான் கைலாயத்தில் தன்னை மறந்து நடனமாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவரையும் அறியாமல் அவர் உடம்பில் இருந்த வஸ்திரம் நழுவி விழுந்தது. இதை பார்த்த சிவகணங்கள் சிவனை பார்த்து சிரித்தன.
இதை உணர்ந்த சிவபெருமான் சிவகணங்களை பூமிக்கு செல்லுமாறு சபித்தார். இதனால் மன வேதனை அடைந்த சிவகணங்கள், சிவனின் அருளை மீண்டும் பெற பெருமாளை நோக்கி தவமிருந்தனர். இதனால் பெருமாள், ஆதி கேசவப் பெருமாளாக பூத கணங்களுக்கு காட்சி அளித்து, பின் ஆதிசேஷனை அழைத்து குளம் ஒன்றை எழுப்பினார். அவற்றில் அந்த பூத கணங்களை மூழ்கி எழச்செய்து அவர்களுக்கு சாப விமோச்சனம் பெற வழி செய்தார்.
பூதகணங்களுக்கு சாப விமோச்சனம் கிடைத்த இடமானதால் இந்த இடம் பூதபுரி என்ற பெயர் பெற்றது. பின் நாளடைவில் புதூர் என்று மாறி, பின் ராமானுஜர் அவதரித்தனால் ஸ்ரீபெரும்புதூராக மாறியது. ஸ்ரீராமானுஜரின் திருநட்சத்திரம் திருவாதிரை. ஆகவே ஒவ்வொரு மாதத்திலும் இந்த நட்சத்திரங்கள் வரும் தினங்களில் திருவீதி உலா வரும் வைபோகத்தை நாம் காணலாம்.
ஸ்ரீராமானுஜர் தமது 120 ஆவது வயதில் கி.பி. 1137 ஆம் ஆண்டு தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் பகவத் சாயுஜ்யம் அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர். உயிர் பிரிந்த உடனே தர்மோ நஷ்ட என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது பல அரிசய நிகழ்வுகள் நடந்ததாக முகநூலில் குறிப்பட்டுள்ளது.
ஸ்ரீராமானுஜர் மறைந்த உடன், நம்பெருமாள் என்னும் அரங்கன் தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம். இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள்.
இதன் பின்பு ஸ்ரீராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ ஸ்ரீராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது. திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர்.
தொடர்ந்து ஸ்ரீராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர். ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது. பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட ஸ்ரீராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.
பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப் படுத்துவார்கள் ஸ்ரீராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ளது ஸ்ரீராமானுஜரின் பூத உடல் என்று பலருக்கும் தெரியாது சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைக்கின்றனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் ராமானுஜரின் உடல் பல நூறு ஆண்டுகளாக பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு பக்தர்களால் இன்றைக்கும் வணங்கப்படுகிறது. அவருடைய திருமேனிக்கு குங்குமப்பூ,பச்சைக்கற்பூரம் கொண்டு செய்யப்பட்ட தைலம் பூசப்படுகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஸ்ரீராமானுஜருக்கு முதல் வழிபாடு செய்த பிறகே ரங்கநாதருக்கு வழிபாடு நடைபெறுகிறது. பக்தர்கள் வேண்டிய வரங்களை வழங்கக்கூடியவர் ஸ்ரீராமானுஜர். ஓம் நமோ நாராயண என எவர் ஒருவர் உச்சரித்தாலும் அவர்களுக்கு வரும் துன்பங்கள் சூரியனை கண்ட பனிபோல விலகும் என்று மக்களுக்கு உணர்த்தியவர் ஸ்ரீராமானுஜர்.
ஜாதி மத ஏற்றத்தாழ்வுகளை களைய பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மேலக்கோட்டை திருநாராயணபுரத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை ஆலயத்திற்கு நுழைய வைத்து புரட்சி செய்த துறவி அவர். ஹரியும் சிவனும் ஒன்றுதான் என்று இந்த மண்ணில் உள்ள மக்களுக்கு உணர்த்திய மகான் ஸ்ரீராமானுஜர்.
குரு சிஷ்யனுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஸ்ரீ ராமானுஜர். ஸ்ரீராமானுஜ ஜெயந்தி அன்று அவரை ஸ்ரீரங்கத்திற்கோ, திருக்கோஷ்டியூருக்கோ சென்று வழிபட்டு செல்பவர்களுக்கு வாழ்க்கையில் வழிகாட்ட சிறந்த குரு கிடைப்பார். இன்றைய தினம் ஸ்ரீராமானுஜரையும் ஸ்ரீரங்கநாதரையும் வழிபட வாழ்க்கையில் அளவற்ற நன்மைகள் நடைபெறும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications