Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வைகுண்ட ஏகாதசி.. அலங்காரமாக உலா வந்த நம்பெருமாள்.. ஸ்ரீரங்கம் ரங்கநாதனுக்கு அரையர் சேவை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்றிரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியுள்ளது. பகல் பத்து உற்சவம் இன்று காலை தொடங்கியுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி வரை 21 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற உள்ளது.

பூலோக வைகுண்டம் என்று பெருமாள் பக்தர்களால் போற்றப்படும் ஸ்ரீரங்கத்தில் சித்திரை தொடங்கி பங்குனி வரைக்கும் மாதந்தோறும் விழாக்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களில் சிறப்பானது
முதன்மையானது வைகுண்ட ஏகாதசி விழா.

Srirangam Vaikunta Ekadasi festival begins with Tirunedunthangam 23rd December Sorgavasal tirappu

மார்கழி மாதத்தில் மொத்தம் 21 நாட்கள் விழாவாக இது கொண்டாடப்படும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள் பகல் பத்து என்றும், பிந்தைய 10 நாட்களை இரா பத்து என்றும் சொல்கிறோம். பகல் பத்து, இரா பத்து, வைகுண்ட ஏகாதசி இந்த 3 உற்சவங்களும்
மார்கழியில் நடைபெறுவது சிறப்பு.

மனிதராய் பிறந்த நாம் யாருக்கும் தீமை நினைக்காமல் எல்ல உயிர்களுக்கும் நன்மையே நினைத்தால் நம்மை அந்த பரந்தாமனே வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார் என்பதன் தத்துவத்தை உணர்த்தவே வைகுண்ட ஏகாதசி நாளில் பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.

ஸ்ரீ ரங்கத்தில் நேற்றிரவு திருமங்கையாழ்வாரால் அருளப்பட்ட திருநெடுந்தாண்டகம், அரங்கன் முன் பாடப்பட்டு விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் பகல்பத்து விழா நடைபெறுகிறது. பகல் பத்து உற்சவத்தின் முதல் நாளான இன்று நம்பெருமாள் காலை 7 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூனா மண்டபம் சென்றடைந்தார். இதனையடுத்து பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.

அரையர் சேவை நடைபெற்றது. இரவு 7.30 மணி வரை அர்ஜூனா மண்டபத்தில் அருள்பாலிக்கும் நம்பெருமாள் பின்னர் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். முதன்முதலில் ஸ்ரீரங்கத்தில்தான் பகல் பத்து இராப் பத்து உற்சவங்கள் தொடங்கியது.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்காக பிரதமை முதல் தசமி முடிய பத்து நாட்களும் பக்தர்கள் ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்களைப் பாடுவார்கள். இந்த பத்து நாள் உற்சவம் அத்யயனோத்ஸவம் என்று அழைக்கப்படும். பகலில் நடப்பதால் பகல் பத்து உற்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பகல் பத்து உற்சவம் அரையர் சேவையுடன் இன்று முதல் தொடங்கியுள்ளது.

திருமங்கைமன்னன், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்தைகை தினத்தன்று பெருமாள் முன்னர் பாடினார். பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை மன்னனிடம் என்ன வேண்டும் என்று கேட்க அதற்கு அவர் வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களை கேட்டு மகிழ்வது போல் தமிழ் மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை கேட்டருள வேண்டும் என்று கேட்க, அதற்கு பெரிய பெருமாளும் சம்மதித்தார்.

நம்மாழ்வாருக்கு பெருமை சேர்த்த திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் பொருட்டு நாதமுனி காலத்தில் திருமங்கை ஆழ்வார் பாடிய பாடல்களின் தொகுப்பான திருமொழிப்பாடல்களையும், மற்ற ஆழ்வார்கள் பாடிச்சென்ற பாடல்களையும் பெரிய பெருமாள் கேட்டருளும் விதமாக பகல்பத்து மற்றும் ராப்பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த உற்சவ நாட்களில் திருமால் அர்ஜூன மண்டபத்திற்கு எழுந்தருளி அரையர் சேவை, திருப்பாவை கோஷ்டி சேவையை ஏற்பார்.
தாளம், நடிப்பு, பாட்டு மூன்றும் இணைந்தது அரையர் சேவை. பகல்பத்து உற்சவத்தில் தினந்தோறும் இருமுறை அரையர் சேவை நடக்கும். நாலாயிர திவ்யபிரபந்தத்தை ராக தாளத்தோடு இசைக்கும் அரையர் சேவை கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாக அமையும்.

பத்தாம் நாள் வரும் 23ஆம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசித் திருநாளில், ஒரு சொட்டு நீர்கூடப் பருகாமல் விரதம் இருக்கும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர். அன்று முழுப் பட்டினியாக இருந்து பெருமாள் நாமத்தையே சுவாசித்து, புசித்து, உயிர்த்து வாழும் பக்தர்கள், பரந்தாமன் வழிகாட்ட, சொர்க்க வாசல் வழியாக சென்று இறைவனை தரிசிக்கின்றனர். துவாதசி நாளில் பலவகை காய்களை சமைத்து நெல்லிக்காய், அகத்திக்கீரையுடன் சாப்பிடுகின்றனர்.

பக்தர்களுக்கு அருளும் பெருமாளுக்கு நல்ல ஆகாரம் வேண்டும். 8 மணிக்கு பொங்கலும், மதியம் நெய்யிலே செய்யப்பட்ட சம்பார தோசையும் நிவேதிக்கப்படுகிறது. ரங்கநாதருக்கு செல்வரப்பம், அரிசிவடை, தோசை, சர்க்கரைப்பொங்கல் போன்ற நைவேத்யங்கள் படைக்கப்படுகின்றன. வேண்டியதை வேண்டியதற்கும் மேலே அருளும் ஸ்ரீரங்கனை வைகுண்ட ஏகாதசி தினத்தன்று தரிசித்தால் சொர்க்கம் நிச்சயம்.

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த பத்து நாட்கள் உற்சவம் ராப்பத்து உற்சவம் என அழைக்கப்படுகிறது. எட்டாம் நாள் வேடுவர்பறி திருவிழா. இது 96 தத்துவங்களிலிருந்து விடுதலை பெற்றதைக் குறிக்கும். அன்று நம் பெருமாள் தங்கக் குதிரையில் உலாவருவார். கடைசியாக பத்தாம்நாள் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடையும். தமிழகத்தில் ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி அரையர் சேவை நடக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+