அய்யா வைகுண்டர் அவதார தினம்..மார்ச் 4ல் உள்ளூர் விடுமுறை..நெல்லை,குமரி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி: அய்யா வைகுண்டர் அவதார தின விழா வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு வருகிற மார்ச் 4ஆம்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். பள்ளி, கல்லூரிகளில் பொதுத் தேர்வு நடைபெற்றால் விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் ஐயா வைகுண்டர். சிவன் பிரம்மா விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக ஐயா வைகுண்டரை அவர் வழியை பின்பற்றும் மக்கள் பார்க்கின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தாமரைக்குளம் கிராமம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு ஐயா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற மார்ச் 4ஆம் தேதி வைகுண்டரின் 191ஆவது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.
ஐயா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி ஐயா வழி மக்கள் பாதயாத்திரையாக பல ஊர்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு வந்து அருள் பெற்றுச் செல்வர். இதன் காரணமாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.
ஐயா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி மார்ச் 4ஆம் தேதி திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அரசு பொதுத்தேர்வு இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் , வங்கிகள் ஆகியவற்றிற்கும் இந்த விடுமுறை பொருந்தாது.
அனைத்து அரசு கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அவசர பணிகளை கவனிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 11ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications