அமாவாசைக்கு மறந்தும் கூட இதை பண்ணிடாதீங்க.. இந்த 5 பொருட்களையும் வாங்காதீங்க.. தர்ப்பணம் அவசியம்
சென்னை: அமாவாசை திதி என்பது, மறைந்த நம் முன்னோர்களுக்காக விரதம் இருந்து வழிபடுவதற்குரிய நாளாகும். இன்றைய தினத்தில் சில முக்கிய காரியங்களை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. அவைகள் என்னென்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
மாத மாதம் வரும் அமாவாசைகள் முக்கியம் வாய்ந்தது என்றாலும், தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் இந்த 3 அமாவாசைகளும் அதைவிட முக்கியமானதாகும்.. அதிலும், தை அமாவாசை அனைத்திலும் முக்கியமானதாகும்.

இந்த தினத்தில் முன்னோர்களை வழிபடுவது அவசியமாகும்.. ஒவ்வொரு மாதம் தவறினாலும், இந்த தை அமாவாசையில், முன்னோர்களுக்கு திதி தருவதும், பிறருக்கு தானங்களை வழங்குவதும், கட்டாயமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதால், பல தலைமுறை பாவங்களில் இருந்து விடுபட்டு, முன்னோர்களின் ஆசியையும் பெற முடியும்.
நாளை ஜனவரி 28ம் தேதி இரவு 08.10 மணிக்கு துவங்கி, ஜனவரி 29ம் தேதி இரவு 07.21 வரை அமாவாசை திதி வருகிறது.. அதுபோலவே, ஜனவரி 29ம் தேதி அன்று காலை 09.21 மணிக்கு துவங்கி, ஜனவரி 30ம் தேதி காலை 08.59 வரை பெருமாளுக்குரிய திருவோணம் நட்சத்திரமும் உள்ளது.
எள் தண்ணீர்: தை அமாவாசை தினத்தன்று, வசதி இல்லாதவர்கள், அல்லது உடல் நலம் சரியில்லாதவர்கள், அல்லது போதுமான நேரம் இல்லாதவர்கள் என்றாலும்கூட, திதி கொடுக்காமல் இருக்கக்கூடாது. குறைந்தபட்சம் மரத்தடியில் 3 முறை எள்ளும் நீரும் ஊற்றினாலே போதும்.
தை அமாவாசையை பொறுத்தவரை, இந்த நாளில்தான், நம்முடைய முன்னோர்களின் பசியும், தாகமும் அதிகரிக்கும் என்பார்கள். எனவே, காலையில் வீட்டு வாசலில் முன்னோர்கள், எள்ளும், தண்ணீரும் பெறுவதற்காகவே காத்து கொண்டிருப்பார்களாம்.. அதைவிட முக்கியம், தர்ப்பணத்துக்காக கருப்பு எள்ளை மற்றவரிடம் கடனாக வாங்கக் கூடாது.
கோலம் தவிர்க்கலாம்: எனவே, இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் வாசலில் கோலம் போடக்கூடாது... தை அமாவாசை என்றில்லை, எந்த அமாவாசையிலுமே வாசலில் கோலம் போடக்கூடாது.. கோலங்கள் என்பது மகிழ்ச்சியை குறிக்கக்கூடியது.. தெய்வ வழிபாட்டுக்கு உரியது.. எனவே, முன்னோர்களை இழந்து அவர்களின் பிரிவால் வாடிக் கொண்டிருக்கும்போது, அமாவாசை, திதி நாட்களில் வாசலில் கோலம் போடாமல் தவிர்க்க வேண்டும்.
அசைவம், வெங்காயம், பூண்டு சாப்பிடக்கூடாது.. யாரையுமே கடிந்து கொள்ளக்கூடாது.. தண்ணீரில் நின்றுகொண்டு கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கக்கூடாது. கரையில் நின்றுகொண்டு, நீரிலும் தர்ப்பணம் செய்யக் கூடாது. முன்னோர் வழிபாட்டை எப்போதும் கிழக்கு நோக்கி பார்த்தபடிதான் செய்ய வேண்டும். அதுமட்டுமல்ல, தர்ப்பணம் தந்துவிட்டு, வீட்டில் வழிபாடு செய்து முடிக்கும் வரை, பூஜைகளை செய்யக்கூடாது.
எண்ணெய்: அமாவாசை நாளில் எண்ணெய் வாங்குவது, சனி தோஷம் ஏற்பட வழிவகுக்கும். எனவே, தை அமாவாசை நாளில் எண்ணெய் வாங்குவது, மட்டுமல்லாமல், தலைக்கு எண்ணெய் வைப்பது, எண்ணெய் தேய்த்து குளிப்பது போன்றவற்றை செய்யக்கூடாது.. அதேபோல, கல் உப்பு, கோதுமை, அரிசி போன்ற உணவு பொருட்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். தை அமாவாசை தினத்தன்று முடி, நகம் வெட்டக் கூடாது என்பார்கள்.












Click it and Unblock the Notifications