தை அமாவாசை.. கண்டிப்பாக செல்ல வேண்டிய கோவில்கள் இதுதான்! மனப்பிரச்சனை தீரும்.. புண்ணியம் கிடைக்கும்
சென்னை: ஆண்டுதோறும் அமாவாசை வந்தாலும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பதும், முக்கிய கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதும் மனப் பிரச்சனைகளை தீர்ப்பதோடு, புண்ணியத்தை அள்ளித் தரும். அந்த வகையில் தமிழகத்தில் தை அமாவாசை அன்று வழிபட வேண்டிய முக்கிய ஆலயங்கள் குறித்து பார்க்கலாம்..
தமிழ் மாதம் தோறும் தை அமாவாசை வந்தாலும் தை மாதம் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த தினத்தில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுப்பதும் இறை வழிபாடு நடத்துவதும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு தை அமாவாசை ஜனவரி 29ஆம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜனவரி 28ஆம் தேதி இன்று இரவு 8.10 மணிக்கு தொடங்கி ஜனவரி 29ஆம் தேதி இரவு 7.21 இருக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தில் பித்ரு தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.
அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து விட்டு வீட்டில் முன்னோர்கள் படங்களை வைத்து சந்தனம், குங்குமம், துளசி மாலை சூட்டி வழிபடலாம். முன்னோர்களின் படங்கள் கிழக்கு திசையில் இருக்க வேண்டியது அவசியம். முன்னோர்களுக்கு பிடித்த உணவுப் பொருட்களை படைத்து வழிபாடு நடத்துவதோடு அவற்றைக் காகங்களுக்கு உணவாக அளிக்கலாம். மேலும் கோதுமை தவிடு, அகத்திக் கீரை ஆகியவற்றை பசுவிற்கு தானமாக வழங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும்.
தர்ப்பணம் முடிக்கும் வரை வீட்டில் தெய்வ வழிபாடுகளை ஒத்தி வைக்க வேண்டும். தர்ப்பணம் பூஜைகள் முடிந்த பிறகு தான் தினசரி பூஜைகளை செய்ய வேண்டும். மாமிசம் சாப்பிடாமல் இருப்பது கூடுதல் பலன் அளிக்கும். அமாவாசை அன்று வழிபாடு தர்ப்பணம் என எது செய்தாலும் கிழக்கு திசை நோக்கி செய்ய வேண்டியது அவசியம். அதே நேரத்தில் ஆலய வழிபாடும் தை அமாவாசை பலன்களை அள்ளித் தரும்.
அந்த வகையில் தமிழகத்தில் சில முக்கிய கோவில்களில் தை அமாவாசை என்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் நடைபெறும் லட்ச தீப வழிபாடு, ராமேஸ்வரத்தில் தை அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ராமநாதசுவாமி அம்பாளை தரிசனம் செய்வது கூடுதல் அருள் தரும்.
குறிப்பாக தை அமாவாசை எனும் போது திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடு தான் நினைவுக்கு வரும். அந்த நாளில் அந்தாதி பாடிய அபிராமி பட்டருக்கு பௌர்ணமி நிலவை தெரிய செய்து அபிராமி அன்னை அருள் பாலித்ததாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அந்த நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறுகிறது.
இதேபோல அமாவாசை தலம் என அழைக்கப்படும் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் ஆலயம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இருக்கும் மாசாணியம்மன் கோவில், மயிலாடுதுறை மாவட்டத்தில் திருஇந்தளூரில் பரிமள ரங்கநாதர் கோவில், கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமலையான் கோவில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இருக்கும் அமண லிங்கேஸ்வரர் கோயில் ஆகிய கோவில்களில் தை அமாவாசை அன்று இறைவனை தரிசிப்பது கூடுதல் பலன்களை அள்ளித் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications