தை அமாவாசை: சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை தரிசிக்க அனுமதி கிடைக்குமா? வனத்துறை சொல்வதென்ன?
விருதுநகர்: தை மாத தேய்பிறை பிரதோசம், தை அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி முதல் 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகப் பகுதியில் சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்குள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களில் தரிசனம் செய்ய மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியையொட்டிய 8 நாட்கள் மட்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர்.
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்று பட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சதுரகிரி சென்று வந்தால் உடல் நோய் மட்டுமல்ல மன அழுத்தம், மன பாரம் கூட நீங்குகிறது என்பது இந்த கோவிலுக்கு சென்று வந்தவர்களின் அனுபவம்.
தை மாத தேய்பிறை பிரதோஷம், தை அமாவாசை வழிபாட்டுக்காக பிப்ரவரி 7 முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் எனவும் இரவில் பக்தர்கள் தங்குவதற்கும், ஆற்று பகுதிகளில் இறங்கி குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர். மலை ஏற அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆற்றுப்பகுதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
தை அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்ய வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications