பொங்கல் பண்டிகையில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி? 9 மணிக்குள்ளும் நல்ல நேரம்தான்!
சென்னை: தைப் பொங்கலில் சூரிய பகவானை வழிபடுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். தை 1 இன்று இனிதே பிறந்த நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
அறுவடை திருநாள், உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் இது என்பதையும் கூறலாம்.இந்த நன்னாளில் சூரிய பகவானுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

பொதுவாக தைப் பொங்கலில் சூரியனுக்கு படையலிடுவது அவசியம். இது எப்படி என்பதை பார்க்கலாம். உழைக்கும் மக்கள் இயற்கையை தெய்வமாகக் கருதி சூரியனை வணங்கும் பண்டிகையே தைப் பொங்கல் ஆகும்.
வீட்டில் விறகு அடுப்பிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ பொங்கலை பானையில் செய்ய வேண்டும். பச்சரிசி பொங்கல்தான் செய்ய வேண்டும். பிறகு சூரியன் படும் இடத்தில் அதாவது வீட்டின் மொட்டை மாடி, வீட்டின் பின்புறம், அல்லது வீட்டுக்கு வெளிப்புறத்தில் கிழக்கு திசையில் 3 தலைவாழை இலையை வைத்து பழங்கள், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்டவைகளை வைக்க வேண்டும்.
சூரியன் வரும் இடத்தில் கோலமிட்டு, அதற்கு செம்மண்ணிட்டு, பிறகு இலைகளை போட வேண்டும். விளக்கேற்றி, பிள்ளையாரை மஞ்சள் அல்லது மாட்டுச் சாணத்தில் பிடித்து அதற்கு அருகம்புல் உள்ளிட்ட மலர்களை போட வேண்டும்.
இலையில் வைக்க வேண்டியது அவரவர் குடும்ப வழக்கப்படி செய்யும் உணவுகளாகும். பச்சரிசி பொங்கல், சர்க்கரை பொங்கல், எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்த கலவை குழம்பு உள்ளிட்டவைகளை வைத்து வழிபடுவது வழக்கம்.
வாழை இலைக்கு பதிலாக பூசணி இலையையும் பயன்படுத்தலாம். எல்லாவற்றையும் வைத்து பிறகு பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் என சூரியனுக்கு கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். பிறகு சாமி அறையிலும் இதே போல் இலை போட்டு படையலிட வேண்டும்.
மூன்றாவதாக அடுப்பு முன்பும் படைக்கும் வழக்கம் இருப்போர் அதையும் செய்வர். இப்படியாக நாம் பொங்கலை கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகையில் பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
காலை 6 மணி முதல் 8.50 மணிக்குள் சுக்கிர ஓரை முடிகிறது என்பதால் அந்த நேரத்திலும் பொங்கல் வைத்து படையல் போட்டுவிடலாம். இல்லாவிட்டால் 9- 10.30 எமகண்டம் முடிந்து தான் செய்ய வேண்டும். இன்னொரு நேரம் 10.35 மணி முதல் 12 மணிக்குள்ளாகவும் பொங்கல் வைத்து படைக்கலாம்.












Click it and Unblock the Notifications