தைப்பூசம்.. பழனிக்கு படையெடுக்கும் பக்தர்கள்.. திருக்கல்யாணமும் தேரோட்டமும் எப்போது?
பழனி: பழனி முருகன் கோவிலின் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. திருக்கல்யாணத்தையும் தேரோட்டத்தையும் காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் பழனிக்கு காவடிகளை சுமந்து கொண்டு பாதயாத்திரையாக படையெடுத்து வருகின்றனர்.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்த்து வரும் நன்னாளே தைப்பூசமாக கொண்டப்படுகிறது. இந்த நன்னாளானது முருகனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. முருக பத்தர்கள் பலர் நாளாக விரதம் இருந்து, காவடி எடுத்து, அலகு குத்தி முருகனை வழிபடுவது வழக்கம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு தைப்பூச விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ராக்கால பூஜைக்கு பின் கிராமசாந்தி பூஜை நடைபெற்றது. அதைதொடர்ந்து தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி சந்திப்பில் உள்ள அபரஞ்சி விநாயகர் கோவிலில் வாஸ்து சாந்தி பூஜையும், பெரிய நாயகி அம்மன் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பம் அருகே புனித மண் எடுத்து சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
பழனியில் ஊர்க்கோயில் என அழைக்கப்படும் பெரியநாயகியம்மன் கோயிலில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார். இங்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. மயில், வேல், சேவல் உருவங்கள் பொறித்த மஞ்சள் நிற கொடி கோயிலின் உட்புறம் உள்ள கொடி கம்பத்தில் சேவற்கொடி ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா முழக்கமிட்டு முருகனை வழிபட்டனர்.
இன்று இரவு பெரிய நாயகியம்மன் கோயிலை சுற்றி யுள்ள நான்கு ரத வீதிகளில் வள்ளி தேவசேனா சமேத முத்துக் குமாரசுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினசரி காலை முத்துக்குமார சுவாமி வள்ளி தெய்வானையுடன் தந்தப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும், மாலை 8.30 மணிக்கு மேல் வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேணு, வெள்ளி யானை, பெரிய தங்கமயில் வாகனம், மற்றும் தங்கக்குதிரை வாகனத்திலும் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி திருக்கல்யாணமும், வெள்ளி தேரோட்டமும் நடைபெறுகிறது. 25ஆம் தேதி தைப்பூச திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. 28ஆம் தேதி தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது என திருக்கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications