சிங்கப்பூரில் களை கட்டிய தைப்பூச திருவிழா.. பால்குடம் சுமந்த பக்தர்கள்.. எங்கும் அரோகரா முழக்கம்
சிங்கப்பூர்: தைப்பூசம் திருவிழா சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. தண்டபாணிக்கு அரோகரா என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு பால்குடம் சுமந்து வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.
தை மாதத்தில் பவுர்ணமியுடன் பூசம் நட்சத்திரம் இணைந்து வரும் நாள் தைப்பூச திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் தெப்ப உற்சவம், தேரோட்டம் என தைப்பூசம் திருவிழா களைகட்டியது. உலகமெங்கும் வாழும் தமிழ்நாடு மக்கள் தைப்பூசம் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடினர்.

சிங்கப்பூரில் வாழும் தமிழக மக்கள் தைப்பூசத் திருநாளை இன்று கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.. சிங்கப்பூர் நகரமே தமிழகத்தின் ஆன்மீகத்தலம் போல் காட்சியளித்தது. சிங்கப்பூரில் உள்ள பாலதண்டாயுதபானி கோயிலுக்கு ஏாளமான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இந்த இரு கோயில்களும் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்த தமிழர்களால் கட்டப்பட்ட கோயிலாகும். ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்திக்கொண்டும் முகத்தில், நாக்கில், உடலில் வேல் குத்தியும் தமிழ்க்கடவுள் முருகனுக்கு தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினர்.
புதன்கிழமை இரவு 11.30மணிக்குத் தொடங்கிய தைப்பூசத் திருநாள், கொட்டும் மழையிலும் நீடித்தது. பால்குடங்களையும் பல்வேறு வகை காவடிகளையும் ஏந்திய பக்தர்கள் ஶ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்படத் தொடங்கினர். ஶ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலின் முன்புறத்தில் மழையிலிருந்து காக்கும் கொட்டகை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆயிரக்கணக்கானவர்கள் அலகு குத்துவதற்காக முன்பதிவு செய்திருந்தனர்.
l

ஹேஸ்டிங் சாலை, ஷார்ட் சாலை, காதே க்ரீன் சாலையில் ஏராளமான தமிழர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் மேளம், மிருதங்கம், உருமி,நாதஸ்வரம், தவில் இசைத்துக்கொண்டி ஆடிப்பாடியும் உற்சாகமாக ஊர்வலமாக வந்தனர். தமிழர்கள் மட்டுமல்லாது சிங்கப்பூரில் வசிக்கும் பிற நாட்டினரும் முருகன் மேல் பக்தி கொண்டவர்களும் மயில் தோகைகளால் அலங்கரிக்கப்பட்ட காவடிகளை சுமந்து வந்தனர். பெண்களும் சிறுவர்களும் பால்குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக 23 தண்ணீர் பந்தல்கள், அவசர மருத்துவ சேவை, ஶ்ரீ தண்டாயுதபாணி கோயிலுக்கு அருகாமையில் அன்னதானக்கூடம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவை இந்து அறக்கட்டளை வாரியம் மற்றும் இரு கோயில் நிர்வாகங்களின் சார்பில் பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பாரம்பரிய இசைக்கச்சேரிகளும் நடைபெற்றன. பக்தர்கள் வழிநெடுக ஆரவாரமான இசையை இசைத்துக்கொண்டும், உறுமி, மேளம், போன்ற கருவிகளை இசைத்தவாறு முருகனை தரிசனம் செய்யச் சென்றனர். எங்கும் அரோகரா முழக்கம் எதிரொலித்தது. 12,500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து முருகன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல உலகமெங்கிலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மலேசியாவின் பத்துமலை முருகன் கோவில், தண்ணீர் மலை முருகன் கோவில்களில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வெள்ளித் தேரோட்டமும் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக வந்தது.
பத்துமலைக் குகை முருகன் கோவிலில் இந்துக்கள் தவிர சீனர்களும், தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன். இந்துக்களைப் போல் அலகு குத்துதல். காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர். இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் நல்லூர் கந்தசாமி கோவிலில் தைப்பூசம் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் வெள்ளத்தில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. கண்டி கதிர்காமம் முருகன் ஆலயங்களில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மொரீசியஸ், ஆஸ்திரேலியாவிலும் தைப்பூசம் திருவிழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.. கந்தனுக்கு அரோகரா என்ற முழக்கம் உலகமெங்கும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் எதிரொலித்தது.












Click it and Unblock the Notifications